/indian-express-tamil/media/media_files/2025/07/09/devayani-2025-07-09-14-09-32.jpg)
90ஸ் கிட்ஸ்களுக்கு ஃபேவரட்டான படங்களில் சூர்யவம்சம் திரைப்படத்திற்கு எப்போதுமே ஒரு சிறப்பிடம் உண்டு. எத்தனை முறை இப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தாலும், சலிப்பு ஏற்படுவதில்லை என்று பலரும் கூறுகின்றனர்.
இயக்குநர் விக்ரமனின் திரைக்கதை, மணிவண்ணனின் - சுந்தர்ராஜனின் காமெடி காம்போ, சரத்குமார் - தேவயானியின் எவர்கிரீன் ஜோடி, எஸ்.ஏ. ராஜ்குமாரின் ரம்மியமான இசை என ஒரு கமர்ஷியல் படம் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் சூர்யவம்சத்தில் இடம்பெற்றிருந்தன.
அந்த வகையில், இன்றும் கூட சூர்யவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று அப்படத்தில் நடித்தவர்களிடம் ரசிகர்கள் கேட்கின்றனர். இதன் காரணத்தினால், தற்போது சரத்குமார் - தேவயானி இணைந்து நடித்த 3BHK திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ரசிகர்களுக்கு இந்த அளவிற்கு பிடித்தமான சூர்யவம்சம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு சுவாரசிய சம்பவத்தை, அப்படத்தின் கதாநாயகி தேவயானி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, "சூர்யவம்சம் திரைப்படத்தில் 'சலக் சலக்' பாடல் படமாக்கப்பட்டது. அப்போது, ஒரு சேலையை என்னிடம் கொடுத்து உடுத்துமாறு கூறினர். அந்த சேலை மற்றும் பிளவுஸ் கிராமத்து ஸ்டைலில் இருந்தது.
அதனால், இந்த மாதிரி புடவையை உடுத்த மாட்டேன் என்று கூறினேன். இதனால், பெரிய தகராறு நடந்தது. அந்த சூழலில் காதல் கோட்டை போன்ற படங்களில் நடித்திருந்தேன். ஆகையால், இது போன்ற சேலை உடுத்தி நடிப்பது எனக்கு புதிதாக இருந்தது.
அதன் பின்னர், என்னை சமாதானப்படுத்தி கிராமப்புறங்களில் இது போன்ற சேலை உடுத்துவது இயல்பு தான் என்று கூறினார்கள். இதையடுத்து, யூனிட்டில் இருந்து கொடுத்த சேலையை உடுத்தி நடித்தேன். இந்தப் பாடலும் பெரிய ஹிட்டானது. எனக்கு பெரும் நற்பெயர் வாங்கி கொடுத்த படங்களில் காதல் கோட்டைக்கு அடுத்த இடம் சூர்யவம்சத்திற்கு இருக்கிறது" என்று தேவயானி தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த 'சலக் சலக்' பாடலுக்கு பின்பு இப்படி ஒரு சுவாரசிய சம்பவம் நடந்ததை ரசிகர்கள் இப்போது தெரிந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.