தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் தேவயானி. 'தொட்டாசிணுங்கி' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் பல ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார்.
அகத்தியன் இயக்கத்தில், அஜித் குமாருடன் இணைந்து இவர் நடித்த 'காதல் கோட்டை' திரைப்படம், இவரது கலைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர், 'சூர்யவம்சம்', 'நினைத்தேன் வந்தாய்', 'நீ வருவாய் என', 'தெனாலி', 'ஆனந்தம்', 'அழகி' என பல படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது.
திரைப்படங்களை போலவே சின்னத்திரையிலும் தேவயானி வெற்றிவாகை சூடினார். இவரது நடிப்பில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' தொடர், பல லட்சம் மக்களிடம் தேவயானியை கொண்டு சேர்த்தது.
அண்மையில், இவரது நடிப்பில் வெளியான '3BHK' திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கலாட்டா மீடியா யூடியூப் சேனலுடனான ஒரு நேர்காணலின் போது, 'தொட்டாசிணுங்கி' திரைப்படத்தில் பழம்பெரும் நடிகர் குமரிமுத்துவுடன் பணியாற்றிய தனது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/3XV1nk9AeEEXHmTaMsaC.jpg)
அதன்படி, "தமிழில் 'தொட்டாசிணுங்கி' என்ற திரைப்படத்தில் நான் நடித்தேன். அந்த திரைப்படத்தில் பழம்பெரும் நடிகர் குமரிமுத்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். ஜாதகம், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை அவருக்கு பார்க்க தெரியும்.
என்னிடம் அவர் நன்றாக பேசுவார். படப்பிடிப்பு தளத்தில் என்னுடனும், என் தாயாருடனும் நன்றாக பேசக் கூடியவர். ஒரு முறை அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய முதல் திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்று என் தாயார், குமரிமுத்துவிடம் கூறினார்.
உடனே, முதல் திரைப்படம் ரிலீஸாகவில்லை என்றால் பெரிய ஹீரோயின் ஆகி விடலாம் என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் அது ஒரு வகையான பாசிடிவ் சென்டிமென்ட் என தெரிவித்தார். இதைக் கேட்ட எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எத்தனையோ கலைஞர்களுக்கு இதே போன்று நடந்ததாகவும், அதன் பின்னர் அவர்கள் அனைவரும் உயரிய இடத்தை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனால், முதல் திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்று வருத்தப்பட வேண்டாம் என்று குமரிமுத்து கூறினார்" என நடிகை தேவயானி தெரிவித்தார்.
Devayani😱Kumari Muthu சார் என்கிட்ட சொன்ன விஷயம்
Posted by Galatta Media on Saturday, May 10, 2025