ஓட்டு உரிமை கிடைத்த நாளில் இருந்து அதிமுகவிற்கு வாக்களித்துள்ளேன், ஒரே ஒரு முறைதான் விஜயகாந்திற்கு வாக்களித்தேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, சென்னை வடபழனியில் உள்ள 100 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி நகர் சத்தியா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது “ அதிமுகவில் நான் உறுப்பினராக இல்லை. எனக்கு வாக்கு உரிமை வந்ததில் இருந்து அதிமுகவிற்குதான் வாக்கு செலுத்துகிறேன். விஜயகாந்த் கட்சிக்கு ஒரு வாக்கு செலுத்தி உள்ளேன். பெண் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பை தொடங்குவதற்கான திட்டத்தை முதலில் ஜெயலலிதா-தான் தொடங்கி வைத்தார். தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் போன்ற திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதுபோன்ற நலத்திட்டங்களை அறிவித்த ஜெயலலிதா இப்போது நம்மிடம் இல்லை. அவர் தெய்வமாகிவிட்டார் என்பதால் அவரை நாம் வணங்க வேண்டும். அதிமுக என்றுமே மக்களின் தேவையை பார்த்துதான் உதவிகள் வழங்கும். கட்சியை கடந்து நான் மது வேண்டாம் என்று விமர்சிக்கிறேன். தற்போதைய அரசு திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தலாம் என்று கூறுகிறது. தொடர்ந்து இதை வாபஸ் பெறாமல், திட்டத்தை நிறுத்தி வைகின்றனர்.
கடலில் பேனா வைப்பது பெரிய விஷயமில்லை. வீட்டில் உள்ள எல்லா குழந்தைகளும், கையில் பேனா பிடிக்க வேண்டும். கலைஞரை நினைவு கூற வேண்டும் என்றால் நூலகங்களை அமைக்கலாம். ஆனால் அதைவிட்டுவிட்டு சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், கடலில் பேனா வைக்கிறீர்கள். பேனாவை உங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம்.
4 நாட்கள் பட்டினியாக இருந்துவிட்டு மூன்று நாட்கள் சேர்த்து சாப்பிட முடியுமா? . இதுபோலத்தான் 12 மணி நேரம் வேலை திட்டம் இருக்கிறது” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“