பட்டிலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் தற்போது டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன் 2016ம் ஆண்டு மிஸ் தென் இந்தியா அழகிப் போட்டியில் வெற்றி பெற்று பிரபலமானார். இதையடுத்து, 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, 2019ம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். தனது வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் மூலம அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பட்டியல் இன மக்கள் மீது அவதாறூன கருத்துக்களை கூறியிருந்தார்.
மீரா மிதுனின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பலரும் அவரை கடுமையாக விமர்சித்திருந்தனர். மேலும், அவர் மீது புகார்களும் குவிய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீரா மிதுன் ஜாமீனில் வெளியான நிலையில், அதன்பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
தலைமறைவான மீரா மிதுனை பிடிக்க அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மீரா மிதுனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி டெல்லியில் மீரா மிதுனை போலீசார் கைது செய்தனர். அவரை ஆகஸ்ட் 11-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் மனநல காப்பகத்தில் இருப்பதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதால் மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை சென்னை அழைத்து வர இயலவில்லை என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். உடல்நிலை மேம்பட்டு, அவர் பயணம் செய்யலாம் என மருத்துவர்கள் சான்றளித்தவுடன் மீரா மிதுனை நீதிமன்றத்தில், ஆஜர்படுத்துகிறோம்'' என்று குற்றப்பிரிவு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையையும் தள்ளி வைத்துள்ளது.