Nayanthara: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு, மிகப்பெரும் ஆதரவை அளித்து வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள். அதோடு, தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களும் பெரும் ஆதரவை அளித்து வருகிறார்கள்.
தற்போது இவர் ‘பிகில்’ படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், அவரது சம்பளம் குறித்த செய்தி கோலிவுட்டில் ரவுண்டு வருகிறது. அதாவது, ஒவ்வொரு படத்திற்கும் ரூபாய் 4 அல்லது 5 கோடி வரைக்கும் சம்பளமாகப் பெறுவதாக பல நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார் நயன்.
பெண்களை மையப்படுத்தும் கதைகளிலும் நடித்து வரும் நயந்தாராவின் மார்க்கெட் ஹீரோக்களுக்கு நிகராக உயர்ந்துள்ளது. அதனால் அவரின் சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இந்தத் தொகையானது, தமிழ் சினிமாவின் இரண்டாம் கட்ட ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்திற்கு நிகரானது.
தீபாவளிக்கு வெளியாகும் விஜய்யின் ’பிகில்’ மற்றும் பொங்கலுக்கு வெளியாகும், ரஜினிகாந்தின் ’தர்பார்’ ஆகியப் படங்களை முடித்தவுடன், பெண்களை மையப் படுத்தும் படங்களில் அதிகமாக நடிக்க நயன்தாரா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வருடம் ’விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல் மற்றும் கொலையுதிர் காலம்’ என 4 படங்கள் நயன்தாராவுக்கு வெளியானது. தற்போது இவர் தெலுங்கு படமான ’சைரா நரசிம்ம ரெட்டி’ மற்றும் மலையாள படமான ’லவ் ஆக்சன் டிராமா’வின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.