துபாய் தொழிலதிபருடன் திருமணம் செய்துகொண்ட நடிகை பூர்ணா திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமான பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. ஷிம்னா கசீம் என்ற பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக்கொண்டார். தொடர்ந்து 2004-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சு போல் ஒரு பெண்குட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு ஸ்ரீமகாலட்சுமிஎன்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான பூர்ணா, 2008-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து கொடைக்கானல், துரோகி, ஆடுபுலி, வித்தகன், தகராறு, கொடிவீரன், விசித்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதில் தகராறு மற்றும் கொடி வீரன் படத்தில் நெகடீவ ரோலில் நடித்தது பலரின் பாராட்டுக்களை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள பிசாசு 2 படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மலையாளம், தெலுங்கு தமிழ் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள பூர்ணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்தார்.
ஆனால் அடுத்த சில மாதங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என்று சொல்லும் வகையில், பூர்ணா தனது வருங்கால கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், பூர்ணாவுக்கும் ஆசிப் அலிக்கும் நேற்று இரவு துபாயில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணம் தொடர்பான புகைப்படத்தை பூர்ணா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவுடன் வெளியிட்டுள்ளார். இதில், நான் உலகின் மிக அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல துணைவியின் அனைத்து குணாதிசயங்களும் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னை குறைவாக உணரவில்லை.
நான் நானாக இருப்பதற்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள், என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர நானே உழைக்க என்னை ஊக்கப்படுத்தியது. இன்று, நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு மத்தியில் நீங்களும் நானும் இந்த அற்புதமான ஒற்றுமையின் பயணத்தைத் தொடங்குகிறோம்.
இது கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இது கடினமாகவும் எளிமையாகவும் இருக்கும். ஆனாலும் நான் கடைசிவரை உங்களுடன் அன்பாக இருப்பேன் என்றும் எப்போதும் உங்கள் அன்புக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவைபார்த்த ரசிகர்கள் பூர்ணாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“