நடிகை ரேவதி 90 களில் மிகவும் பிரபலமானவர். அவரது படத்திற்கு இன்னும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி நடிகையாக வலம் வருவதுடன், இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களையும் இயக்கியுள்ளார்.
Advertisment
1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய 'மண்வாசனை' திரைப்படத்தின் மூலம் ரேவதி தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரும் வெற்றியைக் கண்ட அவர், தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
தொடர்ந்து 'மௌன ராகம்', 'புன்னகை மன்னன்', 'வைதேகி காத்திருந்தாள்', 'கிழக்கு வாசல்', 'தேவர் மகன்', 'அஞ்சலி', 'மகளிர் மட்டும்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து தனது முத்திரையைப் பதித்தார். ரேவதி தனது நடிப்பு மற்றும் இயக்கத்திற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவர் மூன்று தேசிய விருதுகளையும், ஐந்து ஃபிலிம்பேர் விருதுகளையும், ஒரு கேரள மாநில திரைப்பட விருதையும் வென்றுள்ளார். 'தேவர் மகன்' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். 1988 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனனை ரேவதி திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடுகள் காரணமாக 2002 முதல் பிரிந்து வாழ்ந்த அவர்கள், 2013 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றனர்.
Advertisment
Advertisements
நடிகை ரேவதி தனது சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட மன வருத்தங்கள் குறித்து தி சினிமா க்ளப் யூடியூப் சேனலில் மனம் திறந்து பேசினார். பொதுவாக சினிமா உலகில் பெரிய வருத்தங்கள் இல்லை என்றாலும், சில தனிப்பட்ட சம்பவங்கள் இருந்ததாகவும், அவற்றை தான் கடந்து வந்ததால் இப்போது பேச விரும்புவதில்லை என்றும் தெரிவித்தார்.
ரேவதிக்கு இருக்கும் ஒரே பெரிய வருத்தம், சரியான வயதில் திருமணம் செய்துகொள்ளாததுதான். "நான் திருமணம் செய்த வயதில் செய்திருக்கக் கூடாது. இன்னும் நான்கு வருடங்கள் கழித்துச் செய்திருக்க வேண்டும்," என அவர் மனம் உருகிப் பேசினார்.
இந்த வருத்தத்திற்கான காரணம் என்னவென்றால், "நான் மௌன ராகம் மற்றும் புன்னகை மன்னன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்த காலகட்டத்தில்தான் திருமணம் செய்துகொண்டேன். 'ஐயோ, இன்னும் சில நல்ல படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்திருக்கலாமோ?' என்று இப்போதுதான் தோன்றுகிறது," என விளக்கினார்.
திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடம் நடிப்புக்கு இடைவெளி எடுத்த போதும், ரசிகர்கள் தன்னை தொடர்ந்து ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட ரேவதி, கிழக்கு வாசல், தேவர் மகன் போன்ற சிறந்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், இப்போது சினிமா துறையில் இருக்கும் தொழில் ரீதியான அணுகுமுறை அந்தக் காலத்தில் இல்லை என்றும், தான் 17 முதல் 20 வயது வரை தீவிரமாக உழைத்து, தனது 20வது வயதிலேயே திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினார். இந்த குறிப்பிட்ட முடிவுக்கு அவரது இளமையும், அதன் பக்குவமின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கேட்டபோது, "ஆமாம், இருக்கலாம்," என்று அவர் ஒப்புக்கொண்டார்.