/indian-express-tamil/media/media_files/2025/08/14/actress-sadha-2025-08-14-15-27-37.jpg)
நமது வீதிகளில் வாழும் தெரு நாய்கள் தொடர்பான இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, விலங்குகள் நல ஆர்வலர் மற்றும் நடிகையான சதா-வின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. தெருநாய்களைக் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீருடன் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை சதா 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர். 2006-ல் பேரரசு இயக்கிய படத்தில் நடிகை சதா, நடிகர் அஜித்துடன் இணைந்துதிருப்பதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்குப் பிறகு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த அவர், தற்போது நடிப்பில் இருந்து விலகி, வனவிலங்கு புகைப்படக் கலையில் (Wildlife photography) அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு தீவிர விலங்கு ஆர்வலராகவும் அவர் அறியப்படுகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
நடிகை சதா, இந்தத் தீர்ப்பு ஒரு சமூகப் படுகொலை என்று விவரிக்கிறார். டெல்லியில் தெருநாய் கடித்ததால் ஒரு 6 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியானது. ஆனால், அந்தக் குழந்தையின் மரணம் ரேபிஸ் நோயால் அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும், உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது சரியல்ல என்று சதா கருதுகிறார்.
இந்தத் தீர்ப்பின்படி, டெல்லியில் உள்ள சுமார் 10 லட்சம் நாய்களை எட்டு வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைத்து, இடமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், அரசுக்கு இத்தனை பெரிய எண்ணிக்கையிலான நாய்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வசதிகள் இல்லை. இதனால், இந்த நாய்கள் கொல்லப்படவே வாய்ப்பு உள்ளது என்று அவர் வருத்தத்துடன் கூறுகிறார். தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, சரியான நேரத்தில் கருத்தடை ஊசி (Animal Birth Control - ABC) திட்டங்களை அரசு மற்றும் நகராட்சிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம்.
அரசின் தோல்விக்கு, அப்பாவி நாய்களை தண்டிப்பது நியாயமில்லை என்று அவர் கேள்வி எழுப்புகிறார். அரசால் எந்த உதவியும் செய்யப்படாத நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் தங்கள் சொந்த பணத்தில் நாய்களுக்கு உணவு, மருத்துவம் மற்றும் கருத்தடை சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், இத்தகைய தீர்ப்புகள் அவர்களின் முயற்சிகளை அர்த்தமற்றதாக்கிவிடும் என்று அவர் கவலைப்படுகிறார்.
ஒரு இன நாயை விலை கொடுத்து வாங்குவது, ஒரு தெரு நாய்க்கு தத்தெடுக்கும் வாய்ப்பை பறிப்பதாக அவர் கூறுகிறார். செல்லப்பிராணிகளை விரும்பும் பலர், “அழகான” நாய் வேண்டும் என்ற ஆசையில் விலைக்கு வாங்குவது, தெரு நாய்களின் அவல நிலைக்கு ஒரு காரணமாகிறது. எனவே, செல்லப்பிராணிகளை வளர்க்கும் மக்களும் இந்த பிரச்சினைக்கு சமமான பொறுப்புள்ளவர்கள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். நடிகை சதா தனது பேச்சின் இறுதியில், இந்தத் தீர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து ஒரு சிறந்த தீர்வைக் காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.