தனது காதல் கணவர் ரெடின் கிங்ஸ்லீ குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை, நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார். குமுதம் சினேகிதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலின் போது இந்த தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரெடின் கிங்ஸ்லீ, தற்போது காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் நடனம் மூலமாக, சினிமா உலகில் அவர் ஏற்கனவே அறிமுகம் ஆகி விட்டார். குறிப்பாக, அவள் வருவாளா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகளில் இவர் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர பொருட்காட்சிகளுக்கான ஈவெண்ட் ஆர்கனைஸர்-ஆகவும் ரெடின் கிங்ஸ்லீ பணியாற்றியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம், இவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து, நெற்றிக்கண், அண்ணாத்தே, டாக்டர், நாய் சேகர், பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடியனாக ரெடின் கிங்ஸ்லீ நடித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி நடிகை சங்கீதாவிற்கும், ரெடின் கிங்ஸ்லீக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தனது கணவர் மீது காதல் கொண்ட தருணத்தை நடிகை சங்கீதா சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, "என் வாழ்க்கையில் பல விஷயங்கள் வித்தியாசமாக நடந்தன. மற்றவர்களுக்கு லவ் ஸ்பார்க் பல விதமான சூழலில் வரும். ஆனால், என் தந்தை மறைந்த சூழலில் தான் அப்படி ஒரு உணர்வு எனக்கு வந்தது. என் அப்பா மறைந்த நேரத்தில், சுமார் மூன்று நாட்களுக்கு பின்னர் என்னை சந்திப்பதற்காக ரெடின் கிங்ஸ்லீ வந்திருந்தார்.
அப்போது, வீட்டில் இருந்த எல்லோருமே அப்பா இறந்த சோகத்தில் இருந்தனர். ஆனால், ரெடின் கிங்ஸ்லீ வந்த ஐந்து நிமிடத்தில், அனைவரையும் கலகலப்பாக்கி விட்டார். எனது தந்தையும் அப்படி ஒரு ஜாலியான நபர் தான். எவ்வளவு சீரியஸ் ஆன சூழலாக இருந்தாலும், அந்த இடத்தை என் தந்தை இயல்பாக மாற்றி விடுவார்.
அப்படி ஒரு குணத்தை ரெடின் கிங்ஸ்லீயிடம் நான் உணர்ந்தேன். அதன்படி, என்னுடைய வாழ்க்கையை அவருடன் தொடரலாம் என்று முடிவு செய்தேன்" என நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.