6 குழந்தைகள் ஆசைப்பட்டேன்; ஆனா 2 தான் பெத்துக்கிட்டேன்: ரீ-என்ட்ரி குறித்து மனம் திறந்த சரண்யா பொன்வண்ணன்!
திருமணத்திற்கு பின்னர் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்த நிலையில், மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தது குறித்து நடிகை சரண்யா பொன்வண்ணன் மனம் திறந்து கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்த நிலையில், மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தது குறித்து நடிகை சரண்யா பொன்வண்ணன் மனம் திறந்து கூறியுள்ளார்.
சினிமா உலகில் தனது ரீ-என்ட்ரி குறித்து நடிகை சரண்யா பொன்வண்ணன் பகிர்ந்து கொண்டார். இதற்கான உந்துசக்தியாக தனது கணவர் அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே சரண்யா பொன்வண்ணனின் முகம் தான் நம் எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வரும். குறிப்பாக, அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார்.
இவர் தனது திரைப் பயணத்தை 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக 'நாயகன்' திரைப்படத்தில் கதாநாயகியாக தொடங்கினார். இந்த பிரமாண்டமான அறிமுகம் அவருக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. இதைத் தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டு 'நீரஜனம்' திரைப்படம் மூலம் தெலுங்கிலும், அதே ஆண்டு மம்மூட்டிக்கு ஜோடியாக 'அர்த்தம்' திரைப்படம் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். 1996 ஆம் ஆண்டு 'அப்பாஜி' திரைப்படம் மூலம் கன்னடத் திரையுலகிலும் கால் பதித்து, பன்மொழி நடிகையாக வலம் வந்தார்.
1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பிலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்த சரண்யா, 2003 ஆம் ஆண்டு 'அலை' திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் இணைந்தார். சிம்புவுக்கு அம்மாவாக அவர் நடித்த இந்தப் படம், அவரது இரண்டாம் அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்தது. 'ராம்', 'தவமாய் தவமிருந்து', 'எம் மகன்' போன்ற படங்களில் தனது யதார்த்தமான நடிப்பை அவர் வெளிப்படுத்தினார்.
Advertisment
Advertisements
2010 ஆம் ஆண்டு வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம் சரண்யா பொன்வண்ணனின் கலைப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவர் வென்றார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய தருணம் குறித்து ஒரு நேர்காணலில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
அதன்படி, "திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்ற முடிவில் இருந்தேன். குழந்தைகளை வளர்ப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 6 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால், இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொண்டேன். ஒரு இல்லத்தரசியாக எனது பணியை தொடர வேண்டும் என்ற ஆசை தான் எனக்கு இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் செய்யும் என்னால், ஏன் நடிக்க முடியாது என்று என் கணவர் என்னிடம் கேட்டார்.
அப்படி ஒரு கேள்வியை அவர் கேட்கவில்லை எனில், மீண்டும் திரைப்படங்களில் நான் நடித்திருக்க மாட்டேன். இதனால் தான் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினேன்" என்று சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.