தமிழ் சினிமாவில் குணச்சித்திரம் மற்றும் வில்லன நடிகராக அறியப்படுபவர் பொன்வண்ணன். மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர், சினிமா ஆசையில் சென்னை வந்து இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்துள்ளார். தொடர்ந்து பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இந்த படத்திற்கு வசனமும் பொன்வண்ணன் தான்.
Advertisment
அதன்பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கருத்தம்மா, பசும்பொன் உள்ளிட்ட படங்களின் மூலம் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய பொன்வண்ணன், அன்னை வயல் என்ற படத்தை சிறிய பட்ஜெட்டில் இயக்கினார். தொடர்ந்து நதிக்கரையினிலே, கோமதி நாயகம் ஆகிய படங்களை இயக்கிய பொன்வண்ணன், ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் கடந்த 1995-ம் ஆண்டு நடிகை சரண்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கமல்ஹாசனின் நாயகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சரண்யா தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார். பிரபுவுடன் இணைந்து பொன்வண்ணன் நடித்த பசும்பொன் படத்தில பிரபுவுக்கு ஜோடியாக சரண்யா நடித்திருந்தார்.
சரண்யா பொன்வண்ணன் குடும்பத்துடன்
முதலில் திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்த சரண்யாவை கருத்தம்மா படத்திதான் பொன்வண்ணன் முதலில் சந்தித்துள்ளார். அந்த படத்தில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பொன்வண்ணன் தனது காதலை வெளிப்படுத்தியது குறித்து பேசியுள்ள சரண்யா, பொன்வண்ணன் ஒருநாள் என்க்கு பொன் செய்து உங்க கால்ஷீட் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் எத்தனை நாட்கள் வேண்டும் என்று கேட்டபோது அவர் 70 வருடங்கள் வேண்டும் என்று சொன்னார். உடனே எனக்கு ஷாக்காக இருந்தாலும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொண்டேன்.
ஆனால் நான் உங்களை காதலிக்கிறேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுடன் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் எந்த பிரச்னையும் இல்லை என்று சொன்னார். நான் அவரிடம் யோசிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர் நன்றாக யோசித்து சொல்லுங்கள் என்று சொன்னார்.
அதன்பிறகு நான் எனது அப்பாவிடம் அவர் சும்மா விளையாடுகிறார். செட்டில் அவர் சிரித்தது கூட இல்லை. அவர் ஏன் இப்படி பேசினார் என்பது தெரியவில்லை. என்று சொன்னேன். அதன்பிறகு எங்களுக்கு திருமணம் நடந்தது என்று சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளார். இவர் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“