/indian-express-tamil/media/media_files/2025/07/07/shoba-and-ramarajan-2025-07-07-17-56-07.jpg)
மலையாளத்தில் முன்னணி நடிகையான ஷோபனாவிற்கு, தமிழிலும் கணிசமான அளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் 'தளபதி', 'இது நம்ம ஆளு' போன்ற மிகச் சில படங்களில் நடித்திருந்தாலும், இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
ஆனால், மலையாளத்தில் இவர் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்று கூறலாம். நடனம் மற்றும் நடிப்பு ஆகியவை ஒன்றாக அமைந்த நடிகைகளில் ஷோபனாவிற்கு முக்கிய இடம் இருக்கிறது.
கேரள அரசு விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது என ஏராளமான விருதுகளை வென்ற பெருமையும் நடிகை ஷோபனாவிற்கு இருக்கிறது. தற்போதும் கூட, மோகன்லாலுடன் இணைந்து இவர் நடித்த 'துடரும்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. நடிப்பு மட்டுமல்லாமல் பரத நாட்டியத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவர் ஷோபனா.
இந்நிலையில், பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் கலா மாஸ்டருடனான நேர்காணல் ஒன்றில் நடிகை ஷோபனா சமீபத்தில் பங்கேற்றார். அப்போது, அவர் தவறவிட்ட திரைப்படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஷோபனா அளித்த பதில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில், 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் நடிகை கனகாவின் பாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக நடிகை ஷோபனா கூறியுள்ளார்.
அதன்படி, "முதலில் 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் நடிகை கனகாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை அணுகினர். ஆனால், அப்போதைய சூழலில் அப்படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது.
இதேபோல், 'த்ரிஷ்யம்' திரைப்படத்திலும் மீனா நடித்த பாத்திரத்திற்காக முதலில் என்னை அணுகினார்கள். எனினும், அந்த சமயத்தில் வேறு ஒரு திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், என்னால் த்ரிஷ்யம் படத்தில் நடிக்க முடியவில்லை" என்று ஷோபனா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.