/indian-express-tamil/media/media_files/2025/04/26/UKc8c4YPnoRZCc73kbaU.jpg)
'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்தது தனக்கு பெருமை என்று முன்னணி நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர் நடிகை சிம்ரன். நடிப்பு, நடனம், நகைச்சுவை என அனைத்திலும் சிறந்து விளங்கிய மிகச் சில நடிகைகளில் முதன்மையானவராக சிம்ரன் விளங்குகிறார்.
இது மட்டுமின்றி முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் போன்ற அனைவருடன் ஜோடியாக நடித்த பெருமை சிம்ரனுக்கு உண்டு. குறிப்பாக, கன்னத்தில் முத்தமிட்டாள், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான சசிகுமாருடன் இணைந்து 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்தில் சிம்ரன் நடித்துள்ளார். இந்த சூழலில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததற்கான காரணம் குறித்து நடிகை சிம்ரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "நல்ல குடும்ப கதையாக இருப்பதால் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் நடிக்க உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். இன்னொரு காரணம், சசிகுமார். அவர் ஒரு மிகப்பெரிய இயக்குநர் மற்றும் நடிகர். அவருடன் நடிப்பது எனக்கு பெருமை தான்.
சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் கூடாது. திறமைக்கு முதலிடம் இருக்க வேண்டும். அந்த வகையில் சசிகுமாருடன் இணைந்து நடிப்பதை எனது அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். இனி அடுத்தடுத்து குடும்ப சென்டிமெண்ட் கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதேபோல, ஆக்ஷன் வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்.
தற்போது, லண்டனில் எனது மூத்த மகன் படிப்பு தொடர்பாக அவருக்கு உதவியாக இருக்கிறேன். விரைவில் இந்தியா திரும்புவேன். அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்துகொள்வேன்" எனக் குறிப்பிட்டார். சமீபத்தில் நடிகை சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.