சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 மற்றும் விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், நடிகை வீணா வெங்கடேஷ் கண்ணீர் மல்க வருத்தத்துடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகை வீணா வெங்கடேசன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் சுப்புலெட்சுமி கதாபாத்திரத்திலும் விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். இவருடைய கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் ஆதரவும் இருந்தது.
இந்த நிலையில், நடிகை வீணா வெங்கடேஷுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்திக்கொண்டதால், அவர் 2 சீரியல்களிலும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இதையடுத்து, சித்தி 2 மற்றும் காற்றுக்கென்ன வேலி சீரியல்களில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் மற்றொரு நடிகை அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, வீணா வெங்கடேஷ் 2 சீரியல்கலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதால், கண்ணீர் மல்க வருத்தத்துடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், வீணா வெங்கடேஷ் கூறியிருப்பதாவது: “வணக்கம் நேயர்களே, என் பெயர் வீணா வெங்கடேஷ், விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் மீனாட்சியாக என்னைப் பார்த்திருப்பீர்கள். ராடான் தயாரிப்பில் சித்தி 2 சீரியலில் என்னை சுப்புலெட்சுமியாக பார்த்திருப்பீர்கள். இந்த 2 அற்புதமான காதபாத்திரத்தையும் 2 அற்புதமான புராஜெக்ட்டையும் நான் இழந்துவிட்டேன். அதற்கு காரணம் கொரோனா தொற்று ஏற்பட்டதுதான் காரணம். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் எல்லாம் அன்பும் ஆதரவும் கொடுத்தீர்கள். எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது நீங்கள் எல்லாம் எனக்காக பிரார்த்தனை செய்தீர்கள். என்னை மிஸ் பண்ணீங்கள். திரும்பவும் நாங்க உங்களை அதே கதாபாத்திரத்தில் பார்க்க வேண்டும் என்று எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தீர்கள். இந்த எல்லா அன்பையும் நான் இழந்துட்டேன். 2 சீரியல் டீமும் எனக்கு ஒரு குடும்பம் மாதிரி இருந்தது. எண்டமால் ஷைனிலும் நான் குணமாகி வந்துவிடுவேன் என்று எனக்காக ரொம்ப காத்திருந்தார்கள்.
கோவிட் டெஸ்ட் முடிவதற்கு இன்னும் ஒரு ரெண்டு நாள்தான் இருந்தது. அவர்கள் இந்த 2 நாள் காத்திருந்தார்கள் என்றால் எனக்கு குறைந்த பட்சம் காற்றுக்கென்ன வேலி சீரியலாவது என்னிடம் இருந்திருக்கும். ஆனால், பாவம் அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்களுக்கும் சீரியல் ஒளிபரப்பாக வேண்டும் இல்லையா? யார் இருந்தாலும் இல்லை என்றாலும் நிகழ்ச்சி நடக்க வேண்டும். அதனால், அவர்களும் கனத்த இதயத்துடன்தான் என்னை மாற்றினார்கள். ஆனால், எனக்குதான் காற்றுக்கென்ன வேலி மீனாட்சி மேலேயும் சித்தி 2 சுப்புலெட்சுமி கதாபாத்திரங்கள் மேலேயும் அஃபெக்ஷனும் பொசஸிவ்னஸும் இருந்தது. சித்தி 2 சீரியலில் எனக்கு புடிச்ச கேரக்டர் கிடைத்தது. ரொம்ப குறுகிய காலமாக இருந்தாலும் எனக்கு அவ்வளவு அன்பை கொடுத்தீர்கள். அவ்வளவு ஆதரவு கொடுத்தீர்கள். ஆனால், என்னுடைய போதாத காலம் 2 புராஜெக்ட்டிலும் என்னால் தொடர முடியாமல் போய்விட்டது. நான் ரொம்ப மிஸ் பண்றேன் உங்களையும் உங்கள் அன்பையும் மிஸ் பண்றேன். நிச்சயமாக அந்த 2 கேரக்டரையும் 2 சீரியல் டீமையும், 2 கம்பெனியையும் 2 சேனலையும் மிஸ் பண்றேன்.
இத்தனை நாள் எனக்கு ஆதரவு கொடுத்த இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இன்னும் ஒரு ஆசை இருக்கிறது. திடீர்னு ஒரு அற்புதம் நடந்து இந்த 2 புராஜெக்ட்டிலும் என்னை மறுபடியும் கூப்பிட்டுவிட மாட்டார்களா? மறுபடியும் நானே போய் நடிக்க மாட்டேனா? ஆனால், அதற்கு வாய்ப்புகள் கம்மி. வாய்ப்பு இருக்காணு தெரியல, ஆனால், அற்புதம் என்று ஒன்று இருந்தால் நடக்கலாம். அப்போது, நான் வந்து உங்களை கண்டிப்பாக மறுபடியும் சந்திப்பேன். அப்படி நடக்கலைனா கண்டிப்பாக நான் ஒரு புது புராஜெக்ட் உடன் ஒரு புது கதாபாத்திரத்துடன் மறுபடியும் உங்கள் முன்னாடி உங்கள் பாசத்துக்காகவும் உங்கள் அன்புக்காகவும், உங்கள் ஆதரவுக்காகவும் நான் வந்து நிற்பேன். அப்போது, கண்டிப்பாக நீங்கள் வந்து என்னை ஏற்றுக்
கொள்வீர்கள், இதே ஆதரவையும் அன்பையும் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் மிஸ் பண்ணுகிறேன். ஒவ்வொரு தருணத்தையும் மிஸ் பண்ணுகிறேன்.
உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், கோவிட் போய்விட்டது என்று யாரும் அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள். இந்த கோவிட்டால் 2 மாதத்தில் எல்லாத்தையும் இழந்துவிட்டேன். என் கனவுகள் எல்லாம் சிதறிப் போய்விட்டது. நான் ஆசைப்பட்டதெல்லாம் கைவிட்டுப் போய்விட்டது. அதனால், இந்த கொரோனாவை எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு தகுந்த மாதிரி நீங்க எச்சரிக்கையாக இருங்கள்…” என்று எமோஷனலாக கூறி குரல் உடைந்து கண் கலங்கினார். கண்ணீர் மல்க தொடர்ந்து பேசிய வீணா வெங்கடேஷ், “உண்மையாகவே ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். பண ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்தோஷம் எல்லாமே போய்விடும். அதனால், எச்சரிக்கையாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். எல்லாமே போய்விட்டது என்று நினைக்காதீர்கள். மூன்றாவது அலை வேறு வரப்போகிறது என்று கூறுகிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள். ஆரோக்கியம் முக்கியம். உடல் ஆரோக்கியம் போய்விட்டால் மொத்தம் போய்விடும். அதற்கு நான்தான் எடுத்துக்காட்டு. தெரியல, இந்த மாதிரி நல்ல வாய்ப்புகள், இந்த மாதிரி உறுதியான கதாபாத்திரங்கள் கிடைக்குமா கிடைக்காதா தெரியல. எல்லோருக்கும் வாழ்த்துகள். உங்கள் எல்லோருடைய வாழ்த்துகளாலும் பிரார்த்தனையாலும் நான் மறுபடியும் வருவேன். எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
என் செட்டில் கூட என்னை மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதெல்லாம் தாண்டி கோவிட் பாதித்து இப்போது எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன். இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. என்னுடைய எதிரிகளுக்கு கூட வரக்கூடாது. அந்த அளவுக்கு நான் இந்த 2 மாதத்தில் எல்லா வலிகளையும் அனுபவித்துவிட்டேன். நண்பர்களே தயவு செய்து எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன். உங்கள் எல்லோரையும் மிஸ் பண்ணுகிறேன். விரைல் நான் உங்களை சந்திக்கிறேன்” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.