தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருப்பவர்கள் அஜித், விஜய். இவர்களுக்கு தனித்தனியே ரசிகர் பட்டாளம் உள்ளது. எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி-கமல் போல் அஜித்- விஜய்-க்கு என ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிப்பு, செயல் என ரசிகர்களை கவர்ந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் நடித்துள்ளனர். இவர்கள் படங்கள் ரிலீஸ் சமயத்தில் ட்விட்டர், பேஸ்புக் என சமூகவலைதள பக்கங்களில் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொள்வர்.
இயக்குநர் வினோத், நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித்தை வைத்து படம் இயக்குகிறார். அடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இரு படங்களுக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், விஜய் தற்போது தெலுங்கு முன்னணி இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அஜித் சமூகவலைதளங்களில் இல்லை. விஜய்க்கு ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் உள்ளது. அதில் படத்தை பற்றின அப்டேட் அவ்வப்போது வெளியிடுவார்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆதி. இப்படத்தை ரமணா இயக்கியிருந்தார். விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் தயாரித்திருந்தார். விஜய், திரிஷா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். குடும்ப படமாக இந்த படம் இருந்தது. இந்தப்படத்தின் பாடல்கள் ஹிட் ஆனது.
இந்தப்படத்தின் இயக்குனர் ரமணா அண்மையில் அளித்திருக்கும் பேட்டி தற்போது சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில், ஆதி படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். இது குறித்து தயாரிப்பாளர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் முன்பே தெரிவிக்கப்பட்டது. அவரும் ஒப்புக்கொண்டார்.
ஆனால், அந்த சமயம் அஜித்தின் பரமசிவன் படம் பொங்கல் அன்று ரிலீசாக இருந்தது. உடனே சந்திரசேகர் அவர்கள் விஜய்யின் படத்தையும் பொங்கல் அன்றே ரிலீஸ் செய்யலாம், ஒரு போட்டியாக இருக்கட்டும் என்று என்னிடம் சொன்னார். நாம், ஏப்ரல் 14 தானே படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். அதற்கான பணிகளும் இருக்கிறதே என்று சொன்னேன். உடனே அவர் நான் படத்தை விற்று விட்டேன். சொன்ன தேதியில் நான் ஒப்படைக்க வேண்டும். சீக்கிரமாக படத்தின் பணிகளை முடித்து கொடுங்கள் என்று சொன்னார். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என மூன்று மாத பணிகளை டிசம்பருக்குள் முடித்தோம் என்று அவர் கூறினார்.
இந்தநிலையில், இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பேட்டி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.