/indian-express-tamil/media/media_files/2025/09/08/ajth-2025-09-08-22-50-27.jpg)
இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் வீரரான நரேன் கார்த்திகேயன், வரவிருக்கும் ஆசியன் லீ மான்ஸ் சீரிஸில் நடிகர் அஜித்துடன் சேர்ந்து பந்தயத்தில் பங்கேற்கவுள்ளனர். இதில் வெற்றி பெற்றால், ஃபிரான்சில் நடக்கும் உலகப் புகழ் பெற்ற 24 ஹவர்ஸ் ஆஃப் லீ மான்ஸ் பந்தயத்திற்கு இவர்கள் அணி தகுதி பெறும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இதனிடையே, இந்தியா டுடே நிகழ்வில் பேசிய நரேன், அஜித்துடனான தங்கள் கூட்டணியைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். அஜித்தை ‘மிகவும் எளிமையானவர்’ என்று குறிப்பிட்ட அவர், பந்தய மைதானத்தில்கூட அஜித்தின் தீவிர ரசிகர் பட்டாளம் இருப்பதை நினைவு கூர்ந்தார். “துபாய் ஆட்டோட்ரோம் அரங்கத்தில் போர்ஷே சூப்பர் கப் போட்டியில் தான் பந்தயத்தில் கலந்துகொள்வதாக அஜித் அறிவித்தார். 50,000 பேர் அவரை உற்சாகப்படுத்தினர். இதற்கு முன் அந்த மைதானத்தில் அப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததே இல்லை.
இருவரும் இணைந்து பந்தயத்தில் ஈடுபடும் யோசனை கடந்த ஆண்டு துபாயில் நடந்த இரவு விருந்தின்போதுதான் முதன்முதலில் உருவானது. இப்போது இந்திய ஓட்டுநர்களைக் கொண்ட ஒரு உண்மையான இந்திய அணியை உருவாக்குவது பற்றி அஜித் பேசினார். ஆரம்பத்தில் நான் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் எனக்கு போன் செய்து, ‘நாம் இதைச் செய்யலாம்’ என்று கூறினார்,” என நரேன் கார்த்திகேயன் தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் இணைந்து பந்தயத்தில் ஈடுபடுவது புதிது என்றாலும், இவர்களுக்கு இடையிலான நட்பு 2000-களின் முற்பகுதியில் நரேன் ஃபார்முலா டூ போட்டியில் பங்கேற்றபோதே தொடங்கியது. பைக்குகள் மற்றும் ஏரோமாடலிங் மீது ஆர்வம் கொண்ட அஜித், இங்கிலாந்தில் உள்ள பந்தயத் தடங்களைப் பற்றி நரேனிடம் அடிக்கடி ஆலோசனை கேட்டு வந்துள்ளார். “அப்போதுதான் அவர் மிகவும் நேர்மையானவர் என்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் என்றும் உணர்ந்தேன் என நரேன் கூறியுள்ளார்.
டிசம்பரில் மலேசியாவின் செப்பாங்கில் தொடங்கும் ஆசியன் லீ மான்ஸ் சீரிஸுக்காக அஜித் தீவிரமாகத் தயாராகி வருகிறார். அதைத் தொடர்ந்து அபுதாபியில் அடுத்த பந்தயம் நடைபெறவுள்ளது. அஜித்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டி நரேன் கார்த்திகேயன் கூறுகையில், “கடந்த 18 மாதங்களாக அவர் தனது ஓட்டுநர் திறனை வளர்த்துக்கொள்ள நிறைய முயற்சி செய்துள்ளார். அவர் திறமையானவர், ஆனால் எல்லா ஓட்டுநர்களைப் போலவும், அவருக்கும் சில விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. இப்போது அவர் மிகவும் சிறப்பாகவும், போட்டிக்குத் தயாரான ஒரு ஓட்டுநராகவும் மாறியுள்ளார்.
நடிகருடன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்கவுள்ள உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்ட நரேன், “அவர் அனைவரிடமும் எளிதாகப் பழகக்கூடியவர், நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பவர், மேலும் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸிற்காக ஏதாவது ஒன்றை உருவாக்க உண்மையாகவே முயற்சி செய்பவர். இந்த புதிய பயணத்தை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.