கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தெலங்கானாவில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தார். மேலும், அவரது 9 வயது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Stampede after Allu Arjun visit: Police notice to theatre points to lapses – ‘illegal’ flex boards, lack of proper entry-exit signs
இந்த பிரச்சனையை தொடர்ந்து, திரையரங்க நிர்வாகத்திற்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, திரையரங்கின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்பதற்கு 10 நாள்களில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை காவல் ஆணையர் சி.வி.ஆனந்த் மற்றும் சுகாதார செயலாளர் கிறிஸ்டினா சோங்து ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் நரம்பியல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவனின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது, திரையரங்கிற்கு வந்த அல்லு அர்ஜுனை காண ஏராளமான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.
திரையரங்கம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததாக போலீஸ் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் திரையரங்கிற்கு வருகை தரும் நேரம் குறித்த தகவல்கள் தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் வருகை தந்த பின்னர், ஏராளமான மக்கள் அனுமதியின்றி நுழைந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், இதனால் தான் ரேவதி உயிரிழந்ததாகவும், அவரது மகன் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கிற்கு உள்ளே வரும் பாதை மற்றும் வெளியே செல்லும் பாதைகள் குறித்து அறிவிப்பு பலகை இல்லை எனவும், சட்ட விரோதமாக திரையரங்கம் முன்பு ஃப்ளெக்ஸ் போர்டுகள் அமைத்து, ரசிகர்கள் கூடுவதை திரையரங்க நிர்வாகம் ஊக்குவித்ததாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், திரையரங்க உள்கட்டமைப்பு திருப்திகரமாக இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் பொதுமக்களை பிடித்து தள்ளியதால், சூழ்நிலை மேலும் மோசமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸிற்கு திரையரங்க நிர்வாகம் உரிய பதிலளிக்க வேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அல்லு அர்ஜுன் அன்றைய இரவு ஜெயிலில் இருந்த நிலையில், மறுநாள் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை எதிர்த்து, தெலங்கானா போலீசார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.