நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து அமித் பார்கவ் விலக இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்பதையும் அவரே வீடியோ மூலம் கூறியுள்ளார்.
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று நெஞ்சம் மறப்பதில்லை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் இருந்து நிஷா வெளியேறியதை தொடர்ந்து தற்போது அமித் பார்கவும் வெளியேற உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் விட்டு விலகிய அமித் பார்கவ்
அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமான அமித், பிரியா பவாணி சங்கருடன் இணைந்து நடித்திருப்பார். அந்த சீரியல், பெரும் வெற்ரியோடு ஒவ்வொரு வீடுகளிலும் சென்றடைந்தது.
அதன் பிறகு அமித் கமிட் ஆன சீரியல் தான் நெஞ்சம் மறப்பதில்லை. முன்னாள் செய்தி தொகுப்பாளராக இருந்த சரண்யாவுடன் இணைந்து நடிக்கும் இவர், தற்போது சில காரணங்களுக்காக இந்த சீரியலை விட்டு விலகப் போவதாக கூறியுள்ளார்.
இது குறித்து, வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் கர்நாடகாவில் இருந்து சென்னை வந்தபோது சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தேன். சில நாட்களிலேயே எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் நிறைய பேருக்கு என்னை பிடித்திருக்கிறது. உங்கள் அன்புக்கும், பாசத்திற்கும் நன்றி.
ஆனால் நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான். நெஞ்சம் மறப்பதில்லை சீரியலை விட்டு நான் விலகுகிறேன். எனக்கும் அது ரொம்ப கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நான் பயணிக்க வேண்டும். சொந்தமாக கதைகள் பண்ண வேண்டும், வெப் சீரீஸ் பண்ண வேண்டும். இப்படி எனக்கென்று கனவுகள் சில இருக்கிறது. அதை நோக்கி பயணிக்கப்போகிறேன்” என்றார்.
பலரின் மனதிலும் அர்ஜுன், விக்ரம் என ஆழமாக பதிந்து நிற்கும் அமித் இந்த சீரியலை விட்டு விலகியது அவரின் ரசிகர்கள் மத்தியில் கவலையும் ஏமாற்றத்தையும் தந்திருந்தாலும்; அமித்தின் கனவு நிறைவேற வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் மக்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.