இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பாலிவுட்டில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபரில் வெளியான திரைப்படம் ’அந்தாதுன்’. இதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியான அனைத்து இடங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. குறிப்பாக சீனாவில் ஹாலிவுட் படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத் தள்ளியது ’அந்தாதுன்’.
இந்தப் படத்தில் பார்வையற்ற பியானோ கலைஞராக நடித்த ஆயுஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளிலும் தேர்வாகி மொத்தம் 3 தேசிய விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. படம் ரிலீஸான சமயத்தில் இதன் வரவேற்பைப் பார்த்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் தேசிய விருது அறிவிப்புக்குப் பிறகு, அந்தாதுனின் மவுசு மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக தமிழை பொறுத்தவரை, தனுஷ், சித்தார்த் ஆகிய இருவரும் அந்தாதுன் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. அதிலும், 'அந்தாதுன்' படத்தின் ரீமேக்கில் நான் நடித்தால் எப்படியிருக்கும் என்று ட்விட்டரில் கேள்வியும் எழுப்பியிருந்தார் சித்தார்த்.
இந்நிலையில், நடிகர் தியாகராஜன் 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "அந்தாதுன் கதை ஒரு பியானோ கலைஞரை மையமாகக் கொண்டது. பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக்கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைதேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இதற்கு அவர் சரியாக இருப்பார்” என்று இது குறித்து தெரிவித்துள்ளார் தியாகராஜன். தற்போது படத்தின் இயக்குநர், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
தவிர, ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில் வெளியான 'ஜானி கத்தார்' படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்று, தமிழில் 'ஜானி' என்ற பெயரில் தியாகராஜன் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.