/indian-express-tamil/media/media_files/2025/08/22/anirudh-concert-2025-08-22-11-46-32.jpg)
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு சிக்கல்: தடை கோரி மனு ஐகோர்ட்டில் மனு
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவரது இசையில் சமீபத்தில் வெளியான 'கூலி' படத்தின் பாடல்கள், பின்னணி இசை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், 'ஹூக்கும்' என்ற இசை நிகழ்ச்சியை கடந்த மாதம் 26 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள திருவிடந்தை என்ற இடத்தில் நடப்பதாக அறிவித்திருந்தார். இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் இந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி தரவில்லை. இதனால் நிகழ்ச்சியை ரத்து செய்த அனிருத், டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை (ஆக.23) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் நடைபெறுகிறது' என்று அறிவித்திருந்தார். 'இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களின் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் உளவியல் ரீதியாக மேம்படுத்தும். மேலும் இந்த நிகழ்ச்சி - இசை ரசிகர்களுக்கான ஆகச் சிறந்த முன்னுதாரணமாக திகழும்' என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ. பனையூர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், இசை கச்சேரிக்கு மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என்றும், அதனால் நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறை விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.