AR Rahman: ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் கிரவுண்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதனால், இதனால், ஈ.சி.ஆர் - ஓ.எம்.ஆர் சாலைகள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்களும் பொதுமக்களும் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.
இதேபோல், நிகழ்ச்சி நடந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டு கூட்டம் அதிகமாக இருந்ததால் பலரும் நெரிசலில் சிக்கித் தவித்தனர். உரிய டிக்கெட்டுகள் இருந்தும் பலர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சியை பார்க்க வந்த பெண்கள், குழந்தைகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இசை நிகழ்ச்சி அரங்கில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை எனவும், இருக்கை வசதியின் எண்ணிக்கையை விட இரு மடங்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு உள்பட போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என நிகழ்ச்சியை பார்க்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் தங்கள் அதிருப்தியை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவை சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் நகலை பகிருமாறு ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் தனது X தளத்தில், "அன்பான சென்னை மக்களே, டிக்கெட் வைத்திருந்தும் துரதிருஷ்டவசமான சூழ்நிலையால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் நுழையாதோர் உங்கள் டிக்கெட் நகலை arr4chennai@btos.in அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழு உங்களுக்கு விரைவில் பதிலளிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“