/tamil-ie/media/media_files/uploads/2023/03/Untitled-design-66.jpg)
உலக சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர். ரஹ்மான். இந்திய மொழிகள் மட்டுமல்ல பல்வேறு மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். சினிமாவில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை இவர் பெற்றுள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர். அமீன் இசை கலைஞராகவும், பாடகராகவும் இருந்து வருகிறார். இவரும் பல்வேறு மொழி படங்களுக்கு பாடல் பாடி வருகிறார். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மும்பையில் பாடல் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக அவர் இன்டாகிராமில் அதிர்ச்சி தகவல் பகிர்ந்துள்ளார்.
"மேடையின் நடுவில் நின்றுகொண்டு பாடல் பாடி கொண்டிருந்தோம். பாடல் பாடுவதில் மூழ்கி இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நான் என் குழுவும் நூலிழையில் உயிர் தப்பினோம். அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. இன்று பாதுகாப்பாக, உயிர் உடன் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் நன்றி" என்று பதிவிட்டு விபத்து ஏற்பட்ட கிரேன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரஹ்மான் கோரிக்கை
இதையடுத்து திரைத்துறையினர் பலரும் அமீனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தொடர்ந்து தந்தை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்," சில தினங்களுக்கு முன் மகன் ஏ.ஆர். அமீன் மற்றும் அவரது ஸ்டைலிங் டீம் பெரிய ஆபத்தில் இருந்து தப்பினர். மும்பை ஃபிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் இறைவன் அருளால் எவ்வித காயமும் ஏற்படவில்லை. நாம் நமது தொழில்துறையை வளர்க்கும்போது, படப்பிடிப்பு தளம் மற்றும் சுற்றுப்புறங்களை உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு தரத்திற்கு மேம்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.