/indian-express-tamil/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-110854-2025-09-03-11-09-10.jpg)
பண்டிகை காலங்களில் மட்டுமன்றி, வார இறுதி நாட்களிலும் எந்தெந்த தொலைக்காட்சி சேனல்களில் என்னென்ன புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன என்பதைப் பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் வகையில், டிவி சேனல்கள் முற்றிலும் புதிய திரைப்பட ப்ரோமோக்களை ஒளிபரப்பித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில், குடும்பத்துடன் சேர்ந்து புதிய திரைப்படங்களை டிவியில் பார்ப்பது ஒரு கலாச்சாரமாகவே நிலவி வந்தது.
ஆனால், ஓடிடி தளங்களின் வருகையுடன் இந்த நிலைமை மாற தொடங்கியது. நேரத்திற்கு கட்டுப்படாமல், விருப்பமான நேரத்தில் படம் பார்ப்பதற்கான வசதி, தரமான உள்ளடக்கம், விரைவான ரிலீஸ் ஆகியவற்றால் மக்கள் டிவி சேனல்களில் வெளியாகும் திரைப்படங்களை நோக்கி கொண்டிருந்த ஆர்வம் மெதுவாக குறைய ஆரம்பித்தது. இன்றைய சூழலில், ஒரு திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்ற செய்தி பெரும்பாலானவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. காரணம், அதே படத்தை ஏற்கனவே ஓடிடி தளங்களில் பார்த்திருக்கலாம், அல்லது விரைவில் பார்ப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால், தொலைக்காட்சி சேனல்களில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் போது, அந்த வரவேற்பும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், ஒருகாலத்தில் டிவி ப்ரீமியர் என பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட திரைப்படங்களும், இப்போது மிகக் குறைந்த தாக்கத்துடன் வெளிவரும் நிலைக்கு வந்துள்ளன.
திரைப்படங்களுக்காக டிவி பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதெனும் நிலைமைக்கு மத்தியில், ஒரு திரைப்படம் மட்டும் 1500 தடவைக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. இது உலக சாதனையாக கருதப்படுகிறது. த்ரிஷா நாயகியாக நடித்த அந்த சாதனை படைத்த திரைப்படம் எது என்பதை நீங்கள் அறிவீர்களா?
கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘அதடு’ திரைப்படம் தான் அது. இயக்குநர் த்ரி விக்ரம் இயக்கியிருந்த இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் த்ரிஷா. நாயகனாக மகேஷ் பாபு நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதன் பலனாக அந்த நேரத்திலேயே படம் ரூ.22 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்தப் படம் ‘ஸ்டார் மா’ என்ற சேனலில் 1500 தடவைகளுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. இதுவரை எந்த தெலுங்கு திரைப்படமும் அடையாத இந்த உலக சாதனையை இப்படம் செய்துள்ளது. தற்போது ‘அதடு’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையே ஒரு ஃபேவரைட் படமாகவே உள்ளது.
இந்தப் படம் அமேசான் ப்ரைம் மற்றும் எம் எக்ஸ் பிளேயர் ஆகிய ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கிறது. இதுவரை எந்தப் படமும் 1500 தடவைக்கு மேல் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை என்றும், ‘அதடு’ உலக சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் டிஆர்பி ரேட்டிங்அதிக அளவில் உயர்ந்துள்ளது.
தற்போது ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 2027 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.