/indian-express-tamil/media/media_files/2025/08/24/jananayagan-2025-08-24-09-45-57.jpg)
நடிகர் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பக்கம், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் இன்னொரு பக்கம் என இரு திசைகளில் அவரது பாதைகள் பயணித்து வருகின்றன. இந்த இரு பயணங்களின் சந்திப்புப் புள்ளியாக எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜன நாயகன்' திரைப்படம் பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு உருவாகும் முதல் படம் என்பதால், இது ரசிகர்களிடமும், அரசியல் வட்டாரங்களிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் ஜன.9ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும், இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், சூர்யா, அஜித் ஆகியோரைஅழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஜன நாயகன்' படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வெறும் நடிப்பு மட்டுமல்ல, விஜய்யின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. விஜய்யின் முகம் மட்டுமே ரசிகர்களுக்குத் தெரிந்த நிலையில், அவரது கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்தின் முகத்தையும் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த இந்த வாய்ப்பை விஜய் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. திரைப்படம் வெளியான பின்னரே இதன் உண்மை நிலவரம் முழுமையாகத் தெரியவரும்.
இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன. ஒரு போலீஸ் அதிகாரியாக வரும் விஜய், ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பை எதிர்த்துப் போராடி, இறுதியில் அவரே முதலமைச்சராக மாறுவதுதான் கதையின் மையக்கருத்து என யூகங்கள் தெரிவிக்கின்றன. இது விஜய்யின் நிஜ வாழ்க்கை அரசியல் ஆசைகளைத் திரையில் பிரதிபலிப்பதாக அமைந்து, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கலாம்.
கன்னடத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், 'ஜன நாயகன்' படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் பட்ஜெட் மற்றும் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்துள்ளது.
படத்தின் மற்றுமொரு சுவாரசியமான தகவல், விஜய்க்கு நெருக்கமான இயக்குநர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகிய மூவரும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் விஜய் உடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஏற்கனவே வைரலான நிலையில், அது 'ஜன நாயகன்' படத்திற்காக எடுக்கப்பட்டது என பேச்சுக்கள் அடிபடுகின்றன.
நடிகர் விஜய் தனது கடைசி படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. 'மாநாடு' மேடைகளில் தனது திரைப்பயணத்தை முடித்துக் கொண்டு மக்கள் சேவை செய்யப்போவதாக அவர் பேசியது குறிப்பிடத்தக்கது. 'கூலி' படத்தைத் தொடர்ந்து, 'ஜன நாயகன்' திரைப்படம் மிகப்பெரிய வியாபாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'ஜெயிலர்' மற்றும் 'லியோ' படங்களின் வசூல் விவாதங்கள் இன்னும் ஓயாத நிலையில், 'கூலி' மற்றும் 'ஜன நாயகன்' படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவாதங்களும் விரைவில் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.
இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும் வரை, இந்தத் தகவல்கள் அனைத்தும் யூகங்களாகவே நீடிக்கும். 'ஜன நாயகன்' பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.