மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா அவரது வாழ்நாளில் சேகரித்து வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட டிவிடிக்களை அவருடைய குடும்பத்தினர் இயக்குனர் அஜயன் பாலா தொடங்கியுள்ள பாலு மகேந்திரா நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கினர்.
தமிழ் சினிமாவை தனது கேமிரா மூலம் அழகான ஒளிப்பதிவிலும் நேர்த்தியான இயக்கத்திலும் தமிழ் சினிமாவை மேம்படுத்தியவர் இயக்குனர் பாலு மகேந்திரா. இவர் கோகிலா, மூன்றாம்பிறை, வீடு, சந்தியா ராகம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இன்றைக்கு தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களாக கோலோச்சிக்கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறன், ராம், பாலா, சீனு ராமசாமி உள்ளிட்ட பல இயக்குனர்களும் பாலு மகேந்திராவின் மாணவர்கள்தான்.
தமிழ் சினிமா அழகியலை வடிவமைத்த இயக்குனர் பாலு மகேந்திரா முதுமை காரணமாக 2014ம் ஆண்டு காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா உலகமே திரண்டு மரியாதை செய்தது.
பாலு மகேந்திரா சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவர் சிறுகதைகளை எழுதியவர். அவர் இயக்கிய கதை நேரம் திரைக்கதை புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அதே நேரத்தில், இயக்குனர் பாலு மகேந்திரா தனது வாழ்நாளில் இந்திய மற்றும் உலக சினிமா படங்களை சேகரிப்பவராக இருந்தார். ஏராளமான புத்தகங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குனர் பாலு மகேந்திராவின் மனைவி அகிலா அவருடைய மகன் ஷங்கி மகேந்திரா இருவரும் பாலு மகேந்திரா சேகரித்து வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட உலக சினிமா டிவிடிக்களை, இயக்குனர் அஜயன் பாலா உருவாக்கியுள்ள பாலு மகேந்திரா நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளனர்.
டிவிடி ஃபார்மேட் தொழில்நுட்ப ரீதியாக காலாவதியானது என்றாலும், அவர்கள் அளித்த 3 பெட்டிகள் நிறைய 500க்கும் மேற்பட்ட டிவிடிக்களை பாலு மகேந்திராவின் நினைவாக ஒரு சிறப்பான அலமாறியில் அடுக்கி வைக்கப்படும் என்று அஜயன் பாலா கூறினார்.
பாலு மகேந்திராவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய புத்தகங்களை ஷங்கி மகேந்திரா, இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயனின் புளூ ஓஷன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அகாடெமிக்கு நன்கொடையாக அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாலு மகேந்திரா சேகரித்து வைத்திருந்த டிவிடிக்களை அவரது குடும்பத்தினர் இயக்குனர் அஜயன் பாலா நூலகத்துக்கு அளித்துள்ளனர்.
இது குறித்து, தற்போது கொடைக்கானலில் வசித்து வரும் பாலு மகேந்திராவின் மகன் ஷங்கி மகேந்திரா கூறுகையில், என்னுடைய அம்மா எனது தந்தை சேகரித்து வைத்திருந்த டிவிடிக்களை அளிப்பதற்காக ஒரு சரியான நபரை தேடிக்கொண்டிருந்தார். என்னுடைய தந்தை ஒரு மிகப்பெரிய புத்தகங்கள் மற்றும் டிவிடிக்கள் சேகரிப்பாளர். அவர் சேகரித்து வைத்திருந்த டிவிடிக்கள் இறுதியாக சரியான மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இயக்குனர் அஜயன் பாலா, நூலகத்தில் பாலு மகேந்திராவின் டிவிடிக்களை தனியாக வைக்கப்போவதாகவும் அந்த டிவிடிக்களை பார்க்க விரும்புவோர் எளிதில் அடையாளம் காணும்படி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். நூலகத்தில் டிவிடிக்களை பார்ப்பதற்கான இடம் உள்ளது. யாராவது டிவிடிக்களை பார்க்க விரும்பினால், அவர்கள் இலவசமாக வந்து பார்க்கலாம் என்று அஜயன் பாலா கூறினார்.
இயக்குனர் பாலு மகேந்திராவின் மறைவுக்குப் பிறகு, இயக்குனர் அஜயன் பாலா, தனது அபிமான இயக்குனரான பாலு மகேந்திரா பெயரில் சென்னை வளசரவாக்கத்தில் சில புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை தொடங்கினார். இப்போது அந்த நூலகம் 3,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் ஒரு பெரிய இடமாக மாறியுள்ளது என்று இயக்குனர் அஜயன் பாலா கூறினார். மேலும், பாலு மகேந்திராவின் மனைவி அகிலா அம்மாவுக்கு நூலகம் ரொம்ப பிடித்திருந்தது. பாலு மகேந்தியாவின் டிவிடிக்கள் நூலகத்துக்கு ஒரு வண்ணத்தை தரும் என்று அஜயன் பாலா கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.