இரு வேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்தால் பதிவு செய்ய முடியாது என்று பயில்வான் ரங்கநாதன் கூறிய தகவல் முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர் மற்றும் பாவனி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்றும், அதனால் இவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்றும் யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், "இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால் தமிழ்நாடு பதிவுத் துறை அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது என்று யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இது முற்றிலும் பொய்யான தகவல். இருவேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்து கொள்வதற்கு, சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதி உள்ளது. அதில் வகுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில், வேறு வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
இதேபோல் நடைபெறும் திருமணங்கள் தமிழ்நாடு அரசின் பதிவுத் துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே, வதந்தியை பரப்பாதீர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.