Bigg Boss 5 Tamil Review Priyanka Abinai Pavani Reddy Ameer Ciby : நேற்றுடன் பாவனி - அபிநய் பிரச்சனை முடியும் என்கிற எதிர்பார்ப்பு உடைந்து, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை நடந்த சொச்சம் சம்பவங்களை நமக்கு ஒளிபரப்பினார்கள். அதில் ஹயிலைட் பிரியங்கா மற்றும் அமீர்தான். ரொம்ப நல்லவன் போல நடிக்காத என்று அபிநயிடம் பிரியங்கா கேட்டது வேற லெவல். தன்னால்தான் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதானது என்கிற குற்ற உணர்ச்சியில் இருப்பதாக அமீர், பாவனியுடன் புலம்பிய காட்சிகளைப் பார்க்க முடிந்தது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, 'என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்' என்றபடி அபிநய் அமீரிடம் கூறியது, 'இது உலக மகா நடிப்புடா சாமி' என்கிற மைண்ட் வாய்ஸ் எட்டிப்பார்க்க வைத்தது. மொத்தத்தில், வீட்டிற்குள் என்னவோ இல்லை என்னென்னவோ நடந்திருக்கிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே, அபிநய் பாவனிக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பிய செய்தி நமக்குப் புதிது. 'ஐ லைக் யூ' என்று சிட்டிசன் ஸ்டைலில் பாட்டுப் பாடியபடி கடிதமெல்லாம் எழுதி கொடுத்திருக்கிறார் அபிநய். ஆனால், இதெல்லாம் காதல் இல்லையாம். நம்புங்கள் மக்களே! இது மட்டுமில்லாமல், தன்னை சகோதரன் என்று கூப்பிட வேண்டாம் என்றும் பாவனியிடம் அபிநய் வலியுறுத்தி உள்ளார். இதெல்லாம் நமக்கு புதிய உருட்டாக இருந்தாலும், ஜெமினி கணேசனின் பேரன் என்பதை நிரூபித்துவிட்டார் அபி.
இதற்கிடையில் இந்த பிரச்சனைகளை எல்லாம் அபிநய் மற்றும் பாவனி இருவரும் சேர்ந்தே சரிசெய்திருக்கலாம் என்றும் அப்படி அவர்கள் செய்யாமல் போனதே இந்த அளவிற்கு வீடே பேசும் அளவிற்கு பெரியதானது என்றும் பிரியங்கா பாவனியிடம் கூறியதெல்லாம் சரிதான். அதையே, அபிநயிடமும் கூறியிருக்கலாம். அபிநயின் இந்த செயல்பாடுகளையெல்லாம் முன்பே காண்பித்திருந்தால், எப்பொழுதோ வீட்டைவிட்டுக் கிளம்பியிருப்பார். காட்டவில்லை என்றாலும், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அனைத்து தகுதிகளும் உடைய போட்டியாளர்தான் அபிநய். இருந்தும், ஏன் இவ்வளவு நாள் பிக் பாஸ் இவரைக் காப்பாற்றி வருகிறார் என்பதுதான் கேள்விக்குறியாகவே உள்ளது.
இப்படி முடிவில்லாத அபிநய் - பாவனி விஷயம் ஒரு பக்கம் என்றால், அடுத்ததாக இந்த சீசன் இறுதி கட்டத்தை நோக்கிச் செல்வதனால், அனைவரையும் நாமினேட் செய்தார் பிக் பாஸ். பிறகு, வழக்கம்போல ஹவுஸ்மேட்ஸ்கிடையே சண்டை மூட்டிவிடும் டாஸ்க் நடைபெற்றது. வீட்டில் இருப்பவர்கள், தங்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்து அதற்காக வாதாடவேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில், முதல் ஆளாக முதலாம் இடத்திற்குச் சென்று அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளக் கடுமையாகப் போராடினார் சிபி. பிறரை கடுமையான வார்த்தைகளாலும் சீண்டினார் என்றும் கூறலாம்.
ஆரம்பத்திலிருந்தே சாந்தமாகவும், வீட்டிற்குள்ளேயும் வீட்டிற்கு வெளியையும் பலரின் பிடித்த போட்டியாளராகவும் வளம் வந்துகொண்டிருந்த சிபி, நேற்று பொறுமையிழந்த நபராகக் காணப்பட்டார். முதல் இடத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் இருந்ததனால், தான் என்ன பேசுகிறோம் என்பதில் தடுமாற்றம் காணப்பட்டது. வார்த்தைகள் மிகவும் கடுமையானதாக இருந்தன. தேவை இல்லாமல் பாவனியை இழுத்தது, நிரூப்பிடம் தொடைநடுங்கி என்று கூறியதெல்லாம் தவிர்த்திருக்கலாம். இதனை வெறும் விளையாட்டாகப் பார்த்திருந்தால் இந்த ஆட்டம் சரி என்றாலும் வார்த்தைகளை சிபி கவனத்துடன் பயன்படுத்தியிருக்கலாம்.
கத்தி கத்தி பேசுறதுதான் பிக் பாஸ் என்று யாரோ இவர்களிடம் தவறாக கூறியிருக்கிறார்கள் போல. எப்போது பார்த்தாலும் கத்துறதே இவர்களுடைய வேலையாக இருக்கிறது. இதனால், அவர்கள் என்ன பேசுகிறார்கள், எதைப் பற்றிப்பேசுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிவதில்லை. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நேற்றைய எபிசோடில் தாமரையின் குரல் அவ்வளவாக ஒலிக்கவே இல்லை. அவர் பேசிய வார்த்தைகள் குறைவு என்றாலும், அனைத்தும் நச் பாயிண்ட்ஸாக இருந்தன. ஆம், தான் 11-வது இடத்தில நின்றாலும் அவரை பொறுத்த வரை அதுதான் முதல் இடம் என்று கூறியது, அழகு! மேலும், சஞ்சீவ் கூட இந்த கத்தும் கோஷத்திற்கு இடையே தெளிவான பார்வையை முன்வைத்தார்.
இறுதியாக முதல் இடத்திலேயே தன்னை தக்கவைத்துக்கொண்ட சிபி, இந்த வார நாமினேஷனில் இருந்து விடுபட்டார். இதற்குத்தான் இந்த அக்கப்போரா பிக் பாஸ்?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil