பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் சாம்பியனான நடிகர் ஆரவ்வின் தந்தை நிலாமுதீன் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். ஒரு நண்பர், வழிகாட்டி, வாழ்க்கையின் பலமாக இருந்த தனது தந்தை மறைந்தார் என்பதை ஆரவ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் ஆதரவைப் பெற்று நிகழ்ச்சியின் இறுதியில் பிக் பாஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் நடிகர் ஆரவ். தற்போது, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் அவர் மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து, ஆரவ் மார்க்கெட் ராஜா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அண்மையில் ஆரவ்க்கும் இளம் நடிகை ராஹிக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், நடிகர் ஆரவ் தனது தந்தையின் மரணத்தை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
ஆரவ் தனது தந்தையின் மரணம் குறித்து குறிப்பிடுகையில், “நான் மிகவும் வலியுடன் எழுதுகிறேன். இன்று நான் ஒரு நண்பரை, ஒரு வழிக்காட்டியை, வலிமையின் தூணாக இருந்த என்னுடைய தந்தையை இழந்துவிட்டேன். கடந்த 2 மாதங்களாக அவர் நோயில் போராடுவதைப் பார்ப்பதற்கு எங்களுக்கு கடினமாக இருந்தது. அப்பா குடும்பத்தில் நீங்கள் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளீர்கள். இந்த இழப்பில் இருந்து நாங்கள் எப்படி மீள்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் எங்களை ஆசிர்வதியுங்கள். அவரது இறுதிச் சடங்கு அவரது விருப்பப்படி நாகர்கோயிலில் நடைபெறும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆரவ்வின் தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்துக்கு ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil