Bigg Boss Tamil 3 - Day 17: தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி.
ஜூன் 23-ம் தேதி துவங்கிய பிக்பாஸ் 3-வது சீசனில் 15 பேர் போட்டியாளர்களாகக் கலந்துக் கொண்டனர். இரு தினங்கள் கழித்து 16-வது போட்டியாளராக மீரா மிதுன் வீட்டுக்குள் நுழைந்தார். கோபமும் சண்டையுமாக இருந்த வீடு ’கொடூரக்கொலை’ டாஸ்கின் மூலம் கலகலப்பாக மாறியிருக்கிறது. பிக்பாஸின் வழிகாட்டுதலின் படி வனிதாவும், முகேன் ராவும் ஒவ்வொருவருவராக கொன்று குவித்து வருகின்றனர். ஏற்கனவே சாக்ஷியும், வைத்யாவும் கொல்லப்பட்ட நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மாவும், ஷெரினும் கொல்லப்பட்டனர்.
தர்ஷன் ஷெரீனுக்கு முத்தம் கொடுத்து அவரை கொலை செய்தார். முகின் ராவ் ரேஷ்மா மீது கோல்டு காபியை கொட்டி அவரை கொலை செய்தார். இதன்மூலம் மயானத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. ஆனால் தங்களை கொலை செய்தவர்கள், மதுமிதாவும், லாஸ்லியாவும் தான் என ஸ்ட்ராங்காக நம்புகிறார்கள் ஷெரினும், ரேஷ்மாவும். இதனை ஏற்கனவே மயானத்தில் இருப்பவர்களிடமும் நம்ப வைத்து விட்டார்கள்.
இந்த விஷயத்தில் வனிதாவையும், முகினையும் பாராட்டியே ஆக வேண்டும். ஹவுஸ்மேட்ஸுக்கு எந்த சந்தேகமும் வராதபடி கனகச்சிதமாக தங்களது பிளானை ஒர்க் அவுட் செய்து வருகிறார்கள். கூடவே இந்த டாஸ்க்கில் ஈடுபாட்டுடன் இருப்பதால், வனிதா யாருடனும் வம்பு தும்புக்கு போகவில்லை. பின்னர் டைனிங் ஹாலில் சேரன் தலைமையில் கொல்லப்படாத போட்டியாளர்களின் மாநாடு நடைபெற்றது. அதில் அனைவரும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்களுடன் வனிதா மற்றும் முகின் ராவும் இருந்தனர். நிச்சயம் இந்த மீட்டிங்கை நினைத்து அவர்கள் இருவரும் சிரித்திருக்க வேண்டும்.
மீதமிருக்கும் போட்டியாளர்கள் கொல்லப்பட்ட போட்டியாளர்கள் பற்றி புகழுரை வாசிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் சேரன், மதுமிதா, சாண்டி, தர்ஷன் ஆகியோருடைய புகழுரை கலகலப்பாக இருந்தது.
அநேகமாக இன்றும் நாளையும் கொலைகாரன் டாஸ்க் தொடர்ந்து வார இறுதியில் கமல் வந்து யார் அந்த கொலைகாரர்கள் என்பதை அறிவிப்பார் என்று தோன்றுகிறது. வன்மம், கோபம், சண்டை, அழுகை இல்லாத இந்த டாஸ்க் உண்மையிலேயே பொழுதுபோக்காக இருப்பது சூப்பர்!