Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
மூன்றாவது முறையாக இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்கள் அனைவரையும் பிக்பாஸ் துவக்க நாளில் அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் கமல். இறுதியாக அவரிடம் 2 கார்டுகள் பேலன்ஸ் இருந்தன. அந்த 2 பேர் யாராக இருக்கும், எப்போது வீட்டுக்குள் வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே நேற்றைய எபிசோட்டில், ’ரவுடி பேபி’ பாடலுடன் பிக்பாஸ் குடும்பத்தினரை எழுப்பி விட்டார் பிக்பாஸ். சரவணன் மீனாட்சி தொடரைப் பார்த்த போதே கவின் மீது தனக்கு இருந்த க்ரஷ்ஷை கவினிடமே சொன்னார் அபிராமி.
பின்னர் எப்படி சமைப்பது என அனைவரும் கூடி முடிவெடுத்தனர். சாண்டி - மோகன் வைத்யா மோதிக் கொள்ளும் பாட்டு போட்டி சுவாரஸ்யம் தருகிறது. இவர்களால் வீட்டில் இருப்பவர்கள் வயிறு குலுங்க சிரித்து மகிழ்கிறார்கள்.
இரவு நேரத்தில், பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய போட்டியாளராக வருகை தருகிறார் மாடலும், நடிகையுமான மீரா மிதுன். ஒவ்வொருவர் சொல்லும் விஷயங்களையும் செய்துக் காட்டி வீட்டுக்குள் சேர்ந்துக் கொள்ளுமாறு கூறினார் பிக்பாஸ். அனைவரும் ஒவ்வொன்றாக சொல்ல, சாக்ஷியும், அபிராமியும் அவரை அலட்சியம் செய்தது தெரிந்தது.