Bigg boss tamil 3 today promo : பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்யா நேற்று கதறி அழுதநிலையில், இன்று ( 26ம் தேதி) ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில், நடிகை ரேஷ்மா பசுபுலாட்டி கதறி அழுது, நம்மையும் சோகத்தில் ஆழ்த்த உள்ளார்.
பிக்பாஸ் 3 சீசன் வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கிவருகிறார். என்ன, இந்த சீசனில் கமலின் பேச்சில் கொஞ்சம் அரசியல் நெடி அதிகமாகவே வீசுகிறது.
முதல் இரண்டு சீசன்களில் சிலப்பல தினங்களுக்கு பிறகு தான் சண்டை என்ற கட்டம் வரும். இந்த சீசனில் ஏனோ, 3வது சீசன் துவங்கிய 3வது நாளிலேயே சென்டிமென்ட், சண்டை என ஆட்டம் களைகட்ட துவங்கியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் நேற்று மோகன் வைத்யா கதறி அழுத நிலையில் இன்று நடிகை ரேஷ்மா கண்ணீர் விட்டு கதறியுள்ளார். ஆட்டம் பாட்டம், காமெடி என இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி காதல், சென்டிமென்ட், சண்டை என அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. நேற்று மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டில் கதறி அழுதார். தனக்கு சொல்லி அழக்கூட ஆள் இல்லை என்று உருக்கமாக பேசி குமுறினார். இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் வந்த மீராவுக்கு எதிராக சாக்ஷியும் அபிராமியும் கூட்டு சேர்ந்து அவரை வச்சு செய்து வருகின்றனர்.
இன்று இரண்டு பிக்பாஸ் புரோமோக்கள் வெளியிடப்பட்டன. முதலாவது புரோமோவில், அபிராமியால் வனிதா, மீராவுக்கு இடையே சண்டை நடப்பது காண்பிக்கப்பட்டது. நினைத்தது நடந்துவிட்டது என்பதை போல் கையை காட்டிவிட்டு சென்றார் அபிராமி.
இரண்டாவது புரோமோவில், ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒரு அறையில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது ஃபாத்திமா பாபு ஒரு பேப்பரை எடுத்து ரேஷ்மாவிடம் உங்கள் குடும்பத்தில் யாருடைய இழப்பு உங்களை மிகவும் பாதித்தது என கேட்கிறார். அதற்கு தான் 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது திடீரென தனது குழந்தையின் இதயத்துடிப்பு வயிற்றிலேயே நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக கூறி அழுகிறார். வயிற்றுக்குள்ளேயே தனது குழந்தை இறந்ததை தன்னால் வாழ்க்கையில் எப்போதும் மறக்கவே முடியாது என்று கூறி கதறினார் ரேஷ்மா. அவரது இந்த சோகக் கதையை கேட்டு மதுமிதா, ஃபாத்திமா, ஷெரின், ஆகியோரும் கண்ணீர்விட்டனர்.
இன்றைய பிக்பாஸ் எபிசோடை பார்க்க உள்ள நேயர்கள் தவறாமல் கையில் கர்சீப் வைத்துக்கொள்ளுமாறு மட்டுந்தான் அவர்கள் புரோமோவில் குறிப்பிடவில்லை..என்னமோ போடா மாதவா!!!