Bigg Boss Tamil 3 Episode 103: வீக் டேஸில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாள் தான் 103-வது எபிசோட். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டுக்குள் வந்தனர். இதில் சரவணனும், மதுமிதாவும் மட்டும் வரவில்லை. அவர்களை ஃபோட்டோவில் காட்டி, மீண்டும் வீட்டுக்குள் கொண்டு வந்தார் பிக் பாஸ்.
Advertisment
ஃபைனலிஸ்ட் போட்டியாளர்கள் ஸொமேட்டோவில் ஆர்டர் பண்ணிய உணவுகள் கொண்டு வரப்பட்டன. இதில் “ஸ்பெகதி அரபி ஆத்தா” என்ற உணவை ஆர்டர் பண்ணிய ஷெரின், அதை வெறித்தனமாக சாப்பிட்டார். ஆனால் நமக்கு பார்ப்பதற்கு அது நூடுல்ஸ் போலத்தான் இருந்தது.
அடுத்ததாக போட்டியாளர்களுக்கு மீண்டும் தங்களது குடும்பத்தினருடன் பேசும் வாய்ப்பை வழங்கினார் பிக் பாஸ், அதுவும் வீடியோ காலில். முதலில் ஷெரின் தனது அம்மாவிடம் பேசினார். ”எப்படியாவது ஜெயிச்சுட்டு வா” என அவர் அம்மா கூறினார். பை பை என இருவரும் பலமுறை சொல்லிக் கொண்டே இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் மற்றும் கவின் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரியானார்கள். இருவரையும் அலேக்காக தூக்கி சந்தோஷமடைந்தார்கள், சாண்டியும் முகெனும். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ”என்ன வர மாட்டேன், வர மாட்டேன்னு சொன்ன, வந்துட்ட” என தர்ஷனிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். ”சிக்கன் இருக்கு வா” என தர்ஷனை அழைத்துச் சென்றார் முகென். பின் சாண்டியும், முகெனும் தர்ஷனுக்கு சிக்கனை ஊட்டி விட்டு மகிழ்ந்தனர். இது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்ததாக முகென் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த அண்ணனிடம் வீடியோ காலில் பேசினார். தங்களின் பழைய நினைவுகளை இருவரும் அசைப்போட்டனர். பின்னர் லாஸ்லியாவும் கவினும் பேசினர். ”நாம ரெண்டு பேரும் தான் கரெக்ட்டா இருந்துருக்கோம்” என கவின் சொன்னதும் லாஸ்லியா முகத்தில் எதையோ சாதித்து விட்டதைப் போன்ற மகிழ்ச்சி தெரிந்தது.
தர்ஷன் வெளியில் போனதற்கு ஷெரின் தான் காரணம் என வனிதா ஆரம்பித்த பிரச்னைக்கு, ”யார் வெளில போனாலும் அதுக்கு அவங்க தான் காரணம், நான் வெளில போனதுக்கு நான் தான் காரணம். அதனால நீ எதுவும் கவலைப்படாத, ஜாலியா இரு” என ஷெரினிடம் கூறினார் தர்ஷன்.
இதனைத் தொடர்ந்து சாண்டி தனது மகள் லாலாவுடன் பேசினார். அப்பாவும் பொண்ணும் பேசியது உணர்வுப்பூர்வமாக இருந்தது. அடுத்ததாக, ”மனைவியிடம் பேசிய சாண்டி, ஃபோன தள்ளி வைம்மா” என கலாய்த்தார். கவினை உள்ளே வர வைத்து, பிறகு லாஸ்லியாவின் அப்பாவுக்கு ஃபோனை கனெக்ட் பண்ணினார் பிக் பாஸ்.
லாஸ்லியாவும் அவரது அப்பாவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல இந்த உரையாடல் இருந்தது. “நா வெளில வந்து நெறைய விஷயம் சொல்றேன் பா, என்னைய பத்தி தெரியும்ல்ல” என லாஸ்லியா கூற, “ஒன்னைய பத்தி தெரியும், உனக்கு என்னைய பத்தி தெரியும்ல்ல” என்றார் அவரது அப்பா. மற்றவர்களுக்கு பஸர் அடித்த பிக் பாஸ், இந்த உரையாடலின் போது மட்டும் அடிக்கவே இல்லை.
பின்னர் போட்டியாளர்கள் அனைவரையும் உட்கார வைத்து, மிகவும் உணர்வுப்பூர்வமான தருணத்தை உருவாக்கினார். அழுது முடித்தப் பிறகு, வெளியில் போய் ஜாலி பண்றோம் என கூறிவிட்டு, மற்ற போட்டியாளர்கள் வெளியேறினார்கள்.