scorecardresearch

Bigg Boss Tamil: நீங்க ஏன் அங்க போனிங்க? – சேரனுக்காக வருத்தப்படும் ரசிகர்கள்

Bigg Boss Cheran: சமீபத்திய எபிசோட்களுக்குப் பிறகு, இப்போது மக்களின் அனுதாபத்தை அவர் பெற்றிருப்பதாக தெரிகிறது. 

Bigg Boss Cheran, Bigg Boss tamil 3

Bigg Boss Cheran: இயக்குநர் – நடிகர் சேரன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கிறார். முதலில் அவர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளப் போவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்தபோது, அதை யாரும் நம்பவில்லை. ஆனால் பிக்பாஸ் மேடையில் போட்டியாளராக அவர் அறிவிக்கப்பட்டதும், பெரும்பாலானோர் அதிர்ச்சிக்குள்ளாகினர். சேரன் ஏன் அங்கு சென்றார்? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அவர் நடத்தப்படும் விதம், இப்போது பார்வையாளர்களிடம் அவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதன்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில், ஒரு சின்ன விஷயத்திற்காக சேரனுடன் சண்டையிட்டார் ரேஷ்மா. சாக்‌ஷியை ஆறுதல் படுத்த வெவ்வேறு சூழலில் சேரன் முயன்றார். ஆனால் அதற்கு சாக்‌ஷியின் ரியாக்‌ஷன் சேரன் மீது இன்னும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இது வரைக்கும் சேரன் ஒருபோதும் மக்களுக்குப் பிடித்த போட்டியாளராக இருந்ததில்லை. அவரின் தீவிர ரசிகர்களின் ஆதரவு மட்டுமே அவருக்கு இருந்து வந்தது. ஆனால் சமீபத்திய எபிசோட்களுக்குப் பிறகு, இப்போது மக்களின் அனுதாபத்தை அவர் பெற்றிருப்பதாக தெரிகிறது.

மீரா மிதூன் மற்றும் சரவணன், சேரனிடம் நடந்துக் கொள்ளும் விதத்தைப் பார்த்து, 4 தேசிய விருதுகளை வென்ற சேரன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது தவறு என்கிறார்கள் ரசிகர்கள். குறிப்பாக நேற்று சேரன் தன்னை தவறாக பிடித்து விட்டார், என பிக்பாஸ் வீட்டுக்குள் ‘மீ டூ’ புகார் கிளப்பிய மீராவால், ட்விட்டரில் ‘சேரன் ஆர்மி’ உருவாகியிருக்கிறது.

திறமையை வெளிக்காட்ட பிக்பாஸ் சரியான இடம் அல்ல எனக்கூறி, சேரன் அங்கே சென்றிருக்கக் கூடாது எனவும் ஆதங்கப்படுகிறார்கள்.

’பாரதி கண்ணம்மா, பொற்காலம், சொல்ல மறந்த கதை, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து’ போன்ற உணர்வுகளை உரசிப் பார்க்கும் படைப்புகளையும் சரி, ‘வெற்றிக் கொடி கட்டு’ என ஜாலி கேலியால் ஒரு பொழுதுப் போக்கு படத்தையும் சரி சேரனால் அத்தனை அழகாகக் கொடுக்கப்பட்டது. கால ஓட்டத்தில் யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை. அதிலும் படைப்பாளிகளுக்கும், லைம் லைட்டில் இருப்பவர்களுக்கும் இந்த விதி அதிகம் பொருந்தும். இன்றைய நவீன யுகத்தில், நிமிடத்திற்கு ஒரு புது படைப்பாளி உருவாகிறான். ஆகையால் தன்னை ரசிகர்கள் மறந்துவிடாமல் இருக்க, ரசிகனின் மனநிலைக்கு ஏற்ப படைப்பாளி தன்னை அடிக்கடி அப்டேட் செய்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது முடியாத போது, ரசிகனுக்கும் தனக்கும் இடைவெளி அதிகரிக்காமல் இருக்க ஏதோ ஒரு விஷயத்தை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இப்படியான சூழல் சேரனையும் விட்டு வைக்கவில்லை என்றே தெரிகிறது!

 

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss tamil cheran should not have gone fans sympathy

Best of Express