/indian-express-tamil/media/media_files/2025/06/12/oyLAEIFaNX1wivPdJeqO.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படம், நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான், தான் 'கூலி' படத்தில் அதிரடியான கெஸ்ட் ரோலில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இது சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில், ஸூம் உடனான ஒரு நேர்காணலில், ஒரு ரசிகர் ஆமிர்கானிடம் 'கூலி' படத்தில் அவர் நடிப்பது குறித்த வதந்திகள் பற்றி கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு, ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும், பின்னர் ஆமிர் கான் தான் நடிப்பதை உறுதிப்படுத்தினார். நீங்கள் ஒரு கடினமான கேள்வியைக் கேட்கிறீர்கள். இதற்கெல்லாம் நான் பதிலளிக்க அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் என்னை ஒரு கடினமான சூழ்நிலையில் தள்ளுகிறீர்கள். நான் லோகேஷுடன் ஒரு படம் செய்கிறேன், 'கூலி'யில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன்" என்று வெளிப்படையாகப் பேசினார்.
'கூலி' படத்தில் எப்படி இணைந்தார் என்பது குறித்து விளக்கிய ஆமிர் கான் "நான் அதைச் செய்ததையும், ரஜினியுடன் பணியாற்றியதையும் மிகவும் ரசித்தேன். நான் ரஜினியின் ஒரு பெரிய ரசிகர். ரஜினி சார் மீது எனக்கு நிறைய அன்பும் மரியாதையும் உண்டு. அதனால், நான் கதையைக்கூட கேட்கவில்லை. லோகேஷ், ரஜினி சார் படத்தில் நான் ஒரு கெஸ்ட் ரோல் செய்ய வேண்டும் என்று சொன்னபோது, 'ஒப்புக்கொண்டேன். எதுவாக இருந்தாலும், நான் அதைச் செய்கிறேன்' என்று சொன்னேன் என்று கூறியுள்ளார்.
மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஒரு முழு நீள திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்த ஆமிர் கான் "நான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஒரு முழு நீள திரைப்படத்தில் நடிக்கிறேன். அவர் 'கைதி 2' முடித்த பிறகு, அவரும் நானும் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் ஒரு படம் செய்கிறோம்" என்று கூறி ரசிகர்களுக்கு மேலும் ஒரு உற்சாகமான செய்தியை அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2024 முதல், 'கூலி' படத்தில் ஆமிர் கானின் கெஸ்ட் ரோல் குறித்த வதந்திகள் பரவி வந்தன. இந்த ஆண்டு, மார்ச் 24 அன்று, லோகேஷ் கனகராஜ் ஆமிர் கானுடன் 'கூலி' செட்டில் இருந்து எடுத்ததாகத் தோன்றிய ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். இது ஆமிர் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பதிவாக இருந்தாலும், ரசிகர்கள் ஆமிர் கான் உண்மையில் கூலி படத்தில் நடிக்கிறார் என்று முடிவு செய்தனர். இப்போது ஆமிர் கானின் உறுதிப்படுத்தல், அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
'கூலி' என்பது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா ப்ளஸ்ஸி மற்றும் பலர் நடித்துள்ளனர். சுதந்திர தினத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் 'கூலி' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.