அபிஷேக் பச்சன் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'காளிதர் லாபதா' திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வரும் ஜூலை 4 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த அறிவிப்பை நடிகர் அபிஷேக் பச்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு தமிழில், மு.ராமசாமி நடிப்பில் வெளியான கே.டி (எ) கருப்புதுரை என்ற திரைப்படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த 'காளிதர் லாபதா'. தமிழ் பதிப்பை இயக்கிய மதுமிதாவே இந்தி ரீமேக்கையும் இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டரை பகிர்ந்து கொண்ட அபிஷேக் பச்சன், "சிரமமான விஷயங்கள் இனி வேண்டாம்! (The talks should now be stopped). சில சமயங்களில், வழிதவறிப் போவது ஒரு சுற்றி வரும் பாதை அல்ல, அதுதான் உண்மையான கதை தொடங்கும் இடம். கனவுகள், திருப்பங்கள் மற்றும் அதைச் சாத்தியமாக்கும் மனிதர்களால் நிறைந்தது," என்று உற்சாகத்துடன் பதிவிட்டிருந்தார்.
'காளிதர் லாபதா' திரைப்படம் கிராமப்புற இந்தியாவின் துடிப்பான பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு உணர்வுபூர்வமான கதை. இது இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் எதிர்பாராத நட்புகளைப் பற்றிய ஒரு அழகான கதை என்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கதைப்படி, அபிஷேக் பச்சன் 'காளிதர்' என்ற வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது குடும்பத்தினர் தன்னை கைவிடத் திட்டமிடுகிறார்கள் என்பதை அறிந்து, அவர் தனது வீட்டிலிருந்து தப்பிச் செல்கிறார்.
அவரது இந்த பயணம் 'பல்லு' என்ற எட்டு வயது அனாதை சிறுவனை சந்திக்கும் போது எதிர்பாராத திருப்பத்தை அடைகிறது. பல்லுவின் எல்லையற்ற உற்சாகமும், ஆர்வமும் காளிதரின் வாழும் விருப்பத்தை மீண்டும் தூண்டிவிடுகின்றன. இருவரும் சேர்ந்து ஒரு சாலைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள், தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் ஒரு பயணத்தில், வயது மற்றும் சூழ்நிலைகளைத் தாண்டி ஒரு அழகான பிணைப்பை உருவாக்குகிறார்கள்.
இத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் தெய்விக் பகெலா மற்றும் முகமது ஜீஷான் அய்யூப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் மதுமிதாவும் படத்தின் போஸ்டரை பகிர்ந்து, "சில சமயங்களில், தொலைந்து போவது ஒரு மாற்றுப் பாதை அல்ல, அதுதான் உண்மையான கதை தொடங்கும் இடம். கனவுகள், திருப்பங்கள் மற்றும் அதைச் சாத்தியமாக்கும் மனிதர்களால் நிறைந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
'காளிதர் லாபதா' திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் எம்மே என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் 'ஹவுஸ்ஃபுல் 5' திரைப்படத்தில் அபிஷேக் பச்சனைப் பார்த்த ரசிகர்கள், 'காளிதர் லாபதா'வில் ஒரு குழந்தையுடன் ஒரு உறவை ஆராயும் அவரது மூன்றாவது திரைப்படமாக இது இருக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன்னர் 'ஐ வான்ட் டூ டாக்' (2024) மற்றும் 'பீ ஹேப்பி' (2025) ஆகிய படங்களில் அவர் குழந்தைகளுடனான உறவை மையப்படுத்திய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.