நடிகர் சூர்யா 6 வேடங்களில் நடிக்கும் ‘கங்குவா’ படத்தில் பாலிவுட் பிரபல நடிகர் பாபி தியோல் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரம் ஒரு அச்சுறுத்தும் வில்லன் பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாபி தியோல் பாத்திரம் கங்குவா படத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் பாபி தியோல் சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா, திஷா பதானி மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.
சூர்யாவின் 'கங்குவா' படத்தின் முதற்கட்ட போஸ்டர் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கும் பீரியட் ஆக்ஷன் படமான கங்குவா-வில் சூர்யா 6 வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில், யோகி பாபு, ஜெகபதி பாபு, திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சூர்யாவின் 'கங்குவா' படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் பாபி தியோல் தமிழில் அறிமுகமாகிறார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாபி தியோல் தமிழ் சினிமாவில் நடிப்பது குறித்து மிகவும் உற்சாகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாபி தியோல் இதற்கு முன் பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீர மல்லு' படத்தில் அறிமுகமாகவிருந்தார். ஆனால், அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில்தான், கங்குவா படக் குழுவினர் பாபி தியோலைத் தொடர்புகொண்டு கங்குவா கதையையும் அவருடைய கதாபாத்திரத்தையும் சொல்லி இருக்கிறார்கள். இந்த கதை பாபி தியோலுக்கு மிகவும் பிடித்துப்போனதால், அவர் உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாபி தியோல் நடிகர் சூர்யாவால் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டவர் என்பதால் கங்குவா படத்தில் பணியாற்ற அவர் மிகவும் ஆர்வமாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கங்குவா படத்தில் நடிக்க பாபி தியோல் நடிக்க ஒப்புக்கொண்டாலும், கங்குவா படத்தில் பாபி தியோல் நடிக்கும், பகுதியைப் படமாக்கவில்லை. நவம்பரில் அவர் நடிக்கும் பகுதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் இந்த படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சென்னையிலும் மும்பையிலும் படப்பிடிப்பு நடக்கும். அடுத்த ஒரு மாதம், பாபி தியோல் தனது வரவிருக்கும் 'அனிமல்' படத்தை புரொமோஷன் செய்ய போதுமான அவகாசம் கொடுக்க திட்டமிட்டுள்ளார். எனவே, அவர் மும்பைக்கும் மற்ற இடங்களுக்கும் பயணம் செய்வார் என்பது தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“