/indian-express-tamil/media/media_files/2025/09/10/tamil-cindh-2025-09-10-18-28-18.jpg)
நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் சமீபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து, முதல் மனைவி மற்றும் 2-வது மனைவிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் சென்றுள்ளது.
இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக இருந்த சஞ்சய் கபூர் சமீபத்தில் உயிரிழந்தார், இவரது முதல் மனைவி நடிகை கரிஷ்மா கபூர். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரு பிள்ளைகள் உள்ளனர். கரிஷ்மாவை பிரிந்த சஞ்சய் கபூர் பிரியா என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார், இதனிடையே சஞ்சய் கபூர் சமீபத்தில் திடீரென மரணமடைந்தார், இதனால் அவரின் சுமார் 30,000 கோடி மதிப்பிலான சொத்து யாருக்கு சொந்தம் என்ற விவாதம் எழுந்துள்ளது.
சஞ்சய் கபூர் இறந்ததால் அவரின் விதவை மனைவி பிரியா, சொத்துக்களை தன்வசப்படுத்த அவரது உயிலை போலியாக தயாரித்துள்ளார் என்று கரிஷ்மாவின் குழந்தைகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். கரிஷ்மாவின் குழந்தைகள் தங்கள் தந்தை சஞ்சயின் சொத்தில் பங்கு கேட்டு தொடுத்த சிவில் வழக்கை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி சிங், பிரதிவாதிகளுக்கு சம்மன் அனுப்பி, இரண்டு வாரங்களில் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதற்கிடையில், சஞ்சயின் விதவை மனைவி, பிரியா கபூர், அவரது சொத்துக்களின் முழு கட்டுப்பாட்டையும் பெறுவதற்காக அவரது உயிலை போலியாக தயாரித்துள்ளார் என்று குழந்தைகள் தங்கள் மனுவில் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த வழக்கு பற்றி, கரிஷ்மாவின் குழந்தைகள் தரப்பு வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, அந்த உயில் இதற்கு முன்பு ஒருபோதும் வெளியிடப்படவில்லை, பதிவு செய்யப்படவில்லை, தாஜ் ஹோட்டலில் அவசரமாக படிக்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், உயிலை நிறைவேற்றுபவர் ஒரு நாள் முன்னதாகவே அதை பற்றி அறிந்து கொண்டார், மேலும் அது ஒரு குடும்ப ஊழியர் மூலம் வெளிவந்தது என்று கூறி, அந்த உயில் தொடர்பான சூழ்நிலைகள் "சந்தேகம் வருவதற்கு வாய்ப்பாக" இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பிரியா கபூரின் வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் ராஜீவ் நாயர், இந்த வழக்கே தவறானது என்று வாதிட்டார். கரிஷ்மாவின் குழந்தைகள் ஏற்கனவே குடும்ப அறக்கட்டளையின் வாரிசுகள் என்றும், வழக்கு தொடுக்கப்படுவதற்கு சற்று முன்பு 1,900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் வாதிட்டார். "இந்த மக்கள் தெருவில் விடப்படவில்லை. நான் ஆறு வயது குழந்தையுடன் ஒரு விதவை. 15 ஆண்டுகளாக, இவர்கள் எங்கேயும் தென்படவில்லை," என்று நாயர் கூறினார்.
அந்த உயில் தங்கள் வசம் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார், அதை நீதிபதி சிங்கிடம் காட்டி, ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அதை மனுதாரர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்த விவகாரத்தில் சஞ்சயின் தாய் ராணி கபூரும் இந்த நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் வைபவ் காகர் மூலம் பேசிய அவர், "ஏதோ தவறாக நடக்கிறது. நான் 80 வயதானவள், என் பேரக்குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறேன். நான் அமைத்த அறக்கட்டளையில் எனக்காக எதுவும் இல்லையா? பலமுறை மின்னஞ்சல்கள் அனுப்பியும், உயிலின் நகல் எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.