லியோ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு மத்திய தணிக்கை வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகியுள்ள படம் லியோ. முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் படமான லியோவில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. 15 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் த்ரிஷா இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறார்.
இவர்கள் தவிர அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படம், அக்டோபர் 19, 2023 அன்று திரைக்கு வரவுள்ளது.
இந்தநிலையில், பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த லியோ படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதில் நடிகர் விஜய் பேசிய ஆபாச வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லியோ படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியிடப்பட்டதால், சென்சார் செய்யப்படவில்லை. அதேநேரம் சென்னையில் உள்ள திரையரங்குகள் உள்பட தமிழகம் முழுவதும் சில திரையரங்குகளில் சென்சார் செய்யப்படாத லியோ படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. ஆனால் சென்சார் செய்யபடாத டிரெய்லரை திரையரங்குகள் வெளியிடக் கூடாது என விதி உள்ளது.
இந்தநிலையில், சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் எப்படி வெளியிடலாம் என விளக்கம் கேட்டு மத்திய தணிக்கை வாரியம் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தணிக்கை சான்றிதழ் இல்லாமல் டிரெய்லர் திரையிடப்பட்டது கிரிமினல் குற்றம் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“