சென்னை,
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இது மட்டுமல்லாது அவர் பல தொடர்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும், தனது வெகுளியா நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த அவர், கடந்த டிசம்பர் 9-ந் தேதி பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் ஒரு தனியார் விடுதி அறைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற பல கட்ட சந்தேகங்கள் நிலவி வருகிறது. தற்போது வரை அவரது மரணம் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில், சித்ரா மரணம் தொடர்பாக அவரது காதல் கணவர் ஹேம்நாத் (31) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது சித்ரவதை தாங்காமல்தான், சித்ரா தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.
இதனால் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஹேம்நாத் மீது பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது. ஹேம்நாத் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டில் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆஷா மனோகரன் என்பவரிடம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஹேம்நாத் மீது ஜெ.ஜெ.நகர் போலீசார், பதிவு செய்த வழக்கு கோர்ட்டு உத்தரவு அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது போல மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மேலும் இருவரிடம் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இது போல ஹேம்நாத் மீது பல மோசடி புகார்கள் குவிந்து வரும் நிலையில் மோசடி மன்னனாக வலம் வந்த ஹேம்நாத், நடிகை சித்ராவுக்கு காதல் வலை விரித்து தற்போது அவரின் மரணத்திற்கும் காரணமாகியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"