நடிகர் சிம்புவின் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு திருப்பிக் கொடுக்க, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவ்வாறு பணத்தைக் கொடுக்காவிட்டால் விக்ரம் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் படம் "துருவ நட்சத்திரம்". நீண்டகாலமாக வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ரம், சிம்ரன், ரிது வர்மா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் 2018 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படம் உலகம் முழுவதும் நாளை (நவம்பர் 24) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "சிம்புவை ஹீரோவாக வைத்து "சூப்பர் ஸ்டார்" என்ற படத்தை இயக்குவதற்காக, கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். அதற்கு முன்பணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை. எனவே எங்களிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, "துருவ நட்சத்திரம் படத்தின் விநியோக உரிமையை விற்பனை செய்ததன் மூலம் கவுதம் வாசுதேவ் மேனன் பணம் பெற்றுள்ளார். இருந்தபோதிலும், தங்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கவில்லை" என கூறினார்.
அப்போது கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன், ”படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்துக்கு தடைக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என்று கூறினார். மேலும், பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் என்று கவுதம் மேனன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி சரவணன், நாளை காலை 10.30 மணிக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகள் என எங்கும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“