/indian-express-tamil/media/media_files/2025/09/05/kamal-2025-09-05-15-28-23.jpg)
சினிமா உலகம் எப்போதும் ஆச்சரியங்களால் நிரம்பியது. ஒரு காலத்தில் ஒரு பெரிய நடிகருடன் குழந்தை நட்சத்திரமாக உடன் நடித்தவர், பின்னாளில் அவரை வைத்தே ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கி வெற்றி பெறுவது என்பது அரிதான நிகழ்வு. அப்படி ஒரு அரிய சாதனை படைத்தவர் சக்ரி டோலெட்டி. 1983-ல் கே. விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான ‘சலங்கை ஒலி’ (தெலுங்கில் சாகர சங்கமம்) படத்தில் கமல்ஹாசன் ஒரு பரதநாட்டிய கலைஞராக நடித்திருப்பார். அந்தப் படத்தில் ஒரு சிறுவன் கமலுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் காட்சியில் நடித்திருப்பான். அதே சிறுவன் தான், 1985-ல் பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனாவின் தம்பியாக ‘மை நேம் இஸ் சக்கு’ என ஆங்கிலம் பேசி ரசிகர்களைக் கவர்ந்திருப்பான். இந்த குழந்தை நட்சத்திரம் தான் பின்னாளில் கமல்ஹாசனையே இயக்கியவர்.
இந்தக் குழந்தை நட்சத்திரம் வேறு யாருமல்ல, சக்ரி டோலெட்டிதான். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர், ஒரு மருத்துவரின் மகன். ஆனால், இவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வம், அவரை திரைத்துறையில் கொண்டு சேர்த்தது. ஆரம்ப நாட்களில் கே. பாலசந்தர் மற்றும் பாக்யராஜ் போன்ற பெரிய இயக்குநர்களுடன் பழகி, அவர்களுக்காக ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளைச் செய்தார்.
பின்னர், அமெரிக்காவில் விஎஃப்எக்ஸ் (VFX) படிப்பு முடித்துவிட்டு, மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார். 2008-ல் கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தில் விஎஃப்எக்ஸ் கலைஞராக மீண்டும் திரையுலகில் கால் பதித்தார். அதன் அடுத்த ஆண்டே, அதாவது 2009-ல், இந்தியில் வெளியான ‘வெட்னஸ்டே’ படத்தின் ரீமேக்காக ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தை இயக்கினார். இதில் கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் கமல்ஹாசனுக்கும், சக்ரி டோலெட்டிக்கும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. ஒரு காலத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது சந்தித்த அதே கதாநாயகனை, இப்போது இயக்குநராக இயக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது, சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
கமல்ஹாசனைத் தொடர்ந்து, சக்ரி டோலெட்டி அஜித்குமாரை வைத்து ‘பில்லா 2’ (2012) என்ற கேங்ஸ்டர் படத்தை இயக்கினார். ராவான கதைக்களத்துடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘வெல்கம் டூ நியூயார்க்’ மற்றும் நயன்தாராவை வைத்து ‘கொலையுதிர் காலம்’ (2019) ஆகிய படங்களையும் இயக்கினார்.
தற்போது சக்ரி டோலெட்டி திரைப்பட இயக்கம் மட்டுமின்றி, தொழில் உலகிலும் கால் பதித்துள்ளார். அவர், கேர்.ஏஐ(care.ai)என்ற செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, ஒரு பெரிய நடிகரை இயக்கி, பின்னர் தொழில்நுட்பத் துறையில் தலைமைப் பொறுப்பில் இருப்பது என சக்ரி டோலெட்டியின் பயணம் பலருக்கும் ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.