News about Ponniyin Selvan in tamil: கோவை மாவட்டத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் சுந்தரவடிவேலு. மூத்த வழக்கறிஞரான இவரும் லோகநாதனும் இணைந்து பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு கூறுகையில், லைகா தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. உண்மை சரித்திரத்தை, கற்பனை கலந்த நாவலாக பொன்னியின் செல்வனை கல்கி எழுதியிருந்தார்.

இது தமிழர்களான சோழர்களின் வரலாற்றையும், அவர்கள் வாழ்வியலையும், வீரம்,வணிகம், பொருளாதாரம் , மற்றும் அதை மேம்படுத்த நடத்தப்பட்ட போர்கள் குறித்து விரிவாக பேசுகிறது.
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க 1950ஆம் ஆண்டில் எம்.ஜி ஆர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதையடுத்து 1990ல் மணிரத்தினம் முயற்சி எடுத்து தற்போது எடுக்கப்பட்டு திரைக்கு வருகிறது அதை தாங்கள் வரவேற்பதாக தெரிவித்தனர்.
மேலும் இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் விளம்பரங்களில் பொன்னியின் செல்வன் என்ற பெயரை PS-1 என பெரிதாக போட்டுவிட்டு கீழே சிறியளவில் பொன்னியின் செல்வன் என குறிப்பிட்டிருக்கின்றனர்.

உலக மொழிகளில் இப்படம், மொழி பெயர்க்கப்படும் போது PS -1 என ஆங்கிலத்தில் வரும் தமிழில் வராது. PS என்பது பாதிரியாரை குறிக்கக்கூடிய சொல். வேறு மாதத்தை குறிக்ககூடியது என்பதால் தவிர்க்க வேண்டுகிறோம். ராஜ ராஜ சோழன் சிறு வயதில் காவிரி ஆற்றில் விழுந்தவரை, பொன்னி என்ற பெண் காப்பாற்றினாள். அதனால் அவருக்கு பொன்னியின் செல்வன் என பெயர் பெற்றார்.
ராஜ ராஜ சோழன் சைவ மதத்தை சார்ந்தவர். வணிக பொருளாதார நோக்கத்திற்காக கடல் வழியாக பயணம் செய்து புத்த மதத்தை தெரிந்துகொண்டு அதற்கு நிறைய செய்திருக்கிறார். அவர் மதத்திற்கு எதிரானவர் அல்ல. இது மதப்போர் என தவறாக புரிந்துகொள்ளக்கூடாது.
எந்த மொழியாக இருந்தாலும், பொன்னியின் செல்வன் என குறிப்பிட வேண்டும். ஆங்கில படத்தில் அவர்கள் பெயரை மாற்றுவதில்லை. அதை அப்படியே போடுகிறார்கள், அதைப்போல தமிழ்ப்பெயரையே ஆங்கிகத்தில் போட வேண்டும். விளம்பரங்களில் மாற்ற வேண்டும் .
வீரத்தமிழர்களின் வரலாறை திரைப்படங்களில் தமிழ்ப்பெயர்களில் பயன்படுத்தினால்தான், தமிழர்களின் வரலாறு மறைக்கப்படாமல் இருக்கும். பொன்னியின் செல்வன் என்ற பெயரையே உலகின் எந்த மொழியில் எடுத்தாலும் போட வேண்டும். பெயரை மாற்றக்கூடாது. தமிழன் என்கிற முறையில் கோரிக்கை விடுக்கிறோம், ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் தயாரிப்பாளர் மற்றும் இயகுனரின் விருப்பம்.

கமர்ஷியல் படத்திற்கும், வரலாற்று படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. வேலையில்லா பட்டதாரி படத்தை VIP என்று சொன்னார்கள். அதை நாங்கள் கேட்கவில்லை. இது வரலாற்று படம் தமிழர்களின் சோழர்களின் வீரத்தை போற்றும் படம் என்பதால் தான் அவர்களின் பெயர்கள் வரலாற்றில் திருத்தப்படக்கூடாது என கோரிக்கை விடுக்கிறோம் என மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil