பேட்ட, விஸ்வாசம் படங்களைத் கூடுதல் காட்சிகளாக திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்திருக்கும் படம் விஸ்வாசம். இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகைக்காக நேருக்கு நேர் மோத இருக்கிறது. வரும் 10ம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கும் இந்த இரண்டு படங்களுக்காக டிக்கெட் விற்பனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இது குறித்து அவர் அளித்த மனுவில், “’பேட்ட’, ‘விஸ்வாசம்’ ஆகிய இரு திரைப்படங்களும் அரசு விடுமுறையில்லாத, நாட்களில் 6 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக ஆன்லைனில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், இது போன்ற தினங்களில் 4 காட்சிகள் திரையிட வேண்டும் என்ற அரசாணை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அதையும் மீறி 6 காட்சிகள் திரையிட இருப்பது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் 6 காட்சிகள் திரையிடும் திரையரங்குகளின், அங்கீகாரத்தை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே முன்பதிவு மூலம் 6 காட்சிகளுக்கு வசூல் செய்த கட்டணங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்த படங்களின் திரையிடலில் ஏதேனும் தடை ஏற்படுமா அல்லது திட்டமிட்டது போல் 6 காட்சிகள் திரையிடப்படுமா என்பது ரசிகர்களிடையே கிளம்பியிருக்கும் புதிய டவுட்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Complaint filed in chennai commissioner office regarding screening of petta and viswasam