ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தெலுங்கு திரையுலகில் சினிமா சான்ஸ் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய பிரபலங்கள் குறித்து தகவல் வெளியிடுவதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி. இவர் கடந்த வாரத்திலிருந்தே தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரையுலகில் இவரை ஏமாற்றியவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாகத் தமிழ் சினிமா இண்டஸ்டிரியில், கடந்த வாரம் மட்டுமே 3 பேரின் பெயர்களை வெளியிட்டார் ஸ்ரீ ரெட்டி. இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என 3 பேரின் பெயர்கள் வெளியிட்டார்.
இந்த விவகாரம் குறித்து, நடிகர் விஷால் தன்னை மிரட்டி வருவதாகவும் ஸ்ரீரெட்டி நேற்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் என்ன மிரட்டினார்? எதைக் கூறி மிரட்டினார் என்ற தகவல்கள் எதுவும் கூறவில்லை.
இதனைத் தொடர்ந்து இன்று நடிகர் டி. ராஜேந்தருக்கு முகநூலில் நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து பேசுகையில், “திரைப்படத்தில் 1979ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தேன். ஒரு கதாநாயகியைக் கூட தொட்டு நடித்தது இல்லை. நடிகைகளுக்கு வசனம் சொல்லி தர வேண்டுமென்றாலும் கூட தொட்டு சொல்லிக் கொடுத்தது கிடையாது. தனிமனித ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருகிறேன். என் மீது எந்த கிசுகிசுவும் வந்ததில்லை . தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக இப்படி ஒரு அவப்பெயரை ஏற்க முடியவில்லை. சமுதாயத்தில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. திரைப்படத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில மோசமானவர்களும் உள்ளனர். பாலியல் புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை. அந்தப் புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும், அவர்களிடம் வாய் இல்லையா?” என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தார்.
டி.ஆர் பேட்டியை பார்த்த ஸ்ரீ ரெட்டி தனது முகநூலில், “ நீங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி ராஜேந்தர் சார். உங்களை நான் தலைவணங்குகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீரெட்டி தமிழ் லீக்ஸ் லிஸ்ட் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. கடந்த 4 அல்லது 5 நாட்களுக்குள்ளேயே இவ்வளவு பிரபலங்களை பற்றி பேசிவிட்டார். அடுத்தது யார் என்ற தகவலுக்காகவே பலரும் காத்திருக்கின்றனர்.