/indian-express-tamil/media/media_files/2025/09/23/prithvi-dulquer-2025-09-23-13-38-52.jpg)
திருட்டுத்தனமாக வெளிநாட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, கேரளாவில் உள்ள சில பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனையின் முக்கிய நோக்கம், பூட்டான் நாட்டிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த வெளிநாட்டு கார்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாகும்.இந்த நடவடிக்கைக்கு "நும்கோர்"என்று பெயரிடப்பட்டுள்ளது. பூட்டான் மொழியில் இந்த வார்த்தைக்கு 'வாகனம்' என்று பொருள்.
சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்யும் இந்த கும்பலை சுங்கத் துறை அதிகாரிகள் நீண்ட நாட்களாக கண்காணித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம், குட்டிப்புரம், திருச்சூர் போன்ற கேரளாவின் சுமார் 30 இடங்களில் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
பிரபல நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரின் வீடுகளிலும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர்.இந்திய சட்டத்தின்படி, பழைய வாகனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தடை உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டில், புதிய வாகனங்கள், பழைய வாகனங்கள் போல் போலியான ஆவணங்கள் மூலம் பூட்டான் வழியாக இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
"இந்த சட்டவிரோத இறக்குமதியில், மோட்டார் வாகனத் துறையின் 'பரிவாஹன்' இணையதளம் உட்பட எங்கள் இணையதளத்திலும் 10 முதல் 15 விதமான மோசடிகள் மற்றும் ஆவணத் திருத்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன," என சுங்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த சோதனையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், வாகன இறக்குமதியில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆய்வில் கேரளாவில் நடிகர் துல்கர் சல்மானின் இரு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்து விற்கப்பட்ட பூடான் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய கார்களை வாங்கிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. துல்கர் சல்மானின் தந்தை மம்முட்டியின் வீட்டில் 10 கார்கள் இருந்தன. 10 கார்களில் 8 கார்கள் பழமையான கார்கள் ஆகும். துல்கர் சல்மானின் டிஃபென்டர் உள்ளிட்ட இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.