Darbar Box Office Collection day 2: ரஜினிகாந்தின் தர்பார் பட பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இங்கு ஏரியா வாரியாக தரப்படுகிறது. மதுரை, ராமநாதபுரம் ஏரியாவில் தயாரிப்பு தரப்பே எதிர்பார்க்காத அளவுக்கு வசூலை வாரிக் குவித்திருக்கிறது தர்பார். இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு தொடருங்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் லைகா தயாரிப்பில் தர்பார் திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியானது. இந்த ஆண்டின் முதல் பெரிய படம் என்ற வகையிலும், ரஜினிகாந்துக்கே உரிய எதிர்பார்ப்பு அடிப்படையிலும் இதன் பாக்ஸ் ஆபீஸ் பற்றி அதிகம் பேசப்படுகிறது.
Darbar tamil nadu Box Office Collection: தர்பார் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்
முதல் இரு நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் பற்றி சினிமா விமர்சகர் திராவிட ஜீவா இங்கே விவரிக்கிறார்..
‘ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் தமிழகம் முழுவதும் 841 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழக சினிமாவில் ஏரியா வாரியாக பிரித்தே கலெக்ஷனை கணக்கிடுகிறார்கள். சென்னை ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஏரியா, என்.ஏ.சி எனப்படும் நார்த் ஆர்காடு, சவுத் ஆற்காடு, சேலம், கோவை, டி.டி. எனப்படுகிற தஞ்சாவூர், திருச்சி, எம்.ஆர். என்றழைக்கப்படும் மதுரை, ராம்நாட் மற்றும் டி.கே. எனப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியன இதில் அடங்கும்.
சரி, இனி ஏரியா வாரியாக கலெக்ஷன் ரிப்போர்ட்டை பார்ப்போம்: சென்னை- 2 நாள் வசூல் 6.9 கோடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஏரியா- 5.21 கோடி, என்ஏசி- 8.01 கோடி, சேலம் மாநகர புறநகர் பகுதிகள்- 6.5 கோடி, கோவை- 5.2 கோடி, டிடி என்றழைக்கப்படும் தஞ்சாவூர், திருச்சி- 8 கோடி, எம்.ஆர்- 11.11கோடி (இந்த வசூல் தயாரிப்பு நிறுவனமே எதிர்பாராதது என்கிறார்கள்), திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளடக்கிய டி.கே.- 9.46கோடி.
ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் சுமார் 60 கோடியை 2 நாட்களில் வசூலித்துள்ளது தர்பார். இன்னும் வார இறுதி நாட்கள் இருக்கிறது. பொங்கல் விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வசூலில் தர்பார் தமிழக திரையுலக வரலாற்றில் புதிய இலக்கை எட்டிப் பிடிக்கும் என உறுதியாக நம்பலாம்.
இதற்கிடையே தர்பார் படம் வசூல் பற்றிய கணக்கை குறைத்துக் காட்ட வேண்டும் என்கிற நோக்கில் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களும், அரசியல் துறையை சேர்ந்த சிலரும் பகீரத முயற்சிகள் எடுப்பது வெளிப்படையாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் போலியான வசூல் கணக்குகளை பரப்புகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் அந்த முயற்சிகள் நிஜத்தை மாற்றிவிடாது.’