கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியை சேர்ந்த நடிகை, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகரும், கொல்லம் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது மரடு போலீசில் புகார் கொடுத்தார். அதில், 'கடந்த 2009-ம் ஆண்டு நாடகமே உலகம் என்ற சினிமா படப்பிடிப்பு திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியில் நடந்தது. அங்குள்ள ஓட்டலில் நடிகர் முகேஷ் தங்கி இருந்தார்.
அப்போது, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை அந்த ஓட்டலுக்கு வரவழைத்தார். அங்கு சென்ற எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது. இதேபோல் நடிகர் மணியன் பிள்ளை ராஜு உள்பட 6 பேர் மீது அந்த நடிகை புகார் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, போலீசார் முகேஷ் மீது பெண்மையை அவமதித்தல், பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து நடிகர் முகேஷ் முன் ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகையின் வாக்குமூலத்தில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி முகேசுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதோடு விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், நடிகைகள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவினர் முன்னிலையில் நடிகர் முகேஷ் கடந்த 24 ஆம் தேதி கொச்சியில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணைக்கு பின்னர் நடிகர் முகேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை வந்த கேரளா போலீஸ்
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் முகேஷ் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, முகேஷ் மற்றும் பிற நடிகர்கள் மீது அந்த நடிகை கொடுத்த தாக்குதல் புகாரை விசாரிக்க கேரளாவில் இருந்து போலீஸ் குழு சென்னை வந்தடைந்தது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூவாட்டுபுழாவை சேர்ந்த இந்த போலீஸ் குழுவில், ஐந்து ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் கோயம்பேடுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற நிலையில், அங்கு கடந்த காலத்தில் தங்கியிருந்த அந்த நடிகையைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்துள்ளனர். வழக்கு விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறி, புகாரின் விவரங்களை வெளியிட போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி போலீசார் விசாரித்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சில குடும்பத்தினர், நடிகைக்கு எதிராக வேறொரு பெண்ணால் தாக்கப்பட்ட புகாரை விசாரித்து வருவதாகவும், போலீஸ் குழு அந்த பெண்ணின் பல புகைப்படங்களை குடியிருப்பு வாசிகளிடம் காட்டி, அவர்கள் அவரை அடையாளம் கேட்டதாகவும் கூறியுள்ளார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“