நீதிபதி பிரதிபா எம். சிங் அமர்வு, ரஹ்மான் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியோருக்கு பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தில் 'வீர ராஜ வீரா' என்ற பாடலிற்காக நசீர் ஜாஹிருதீன் மற்றும் நசீர் ஃபயாசுதீன் ஆகியோருக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக ரூ. 2 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் 2 பாகங்களாக திரைபடத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது.
நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், சரத்குமார் பார்த்திபன் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற 'வீர ராஜ வீரா' என்ற பாடல் தன்னுடைய தந்தை மற்றும் தாத்தா ஆகியோரின் 'ஷிவ ஸ்துதி' பாடலை தழுவி எடுக்கப்பட்டது என்றும், இப்பாடலை பயன்படுத்தியதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என்றும் பாடகர் பயாஸ் வாசிபுதீன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதன்படி, இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், "ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை. இரண்டு பாடல்களும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே, இப்படம் இருக்கும் ஓடிடி தளங்களில், சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் ஸ்லைடுகள் போட வேண்டும். மறைந்த உஸ்தாத் என் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மறைந்த உஸ்தாத் ஜாஹிருதீன் தாகர் ஆகியோரின் சிவ ஸ்துதியின் அடிப்படையில் அமைந்தது என்று குறிப்பிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் விரிவான நகல் வெளியிடப்பட உள்ளது.
வெவ்வேறு பாடல் வரிகள் இருந்தபோதிலும், பாடலின் இசை அமைப்பு, தாளம் ஆகியவை அசல் சிவ ஸ்துதி இசையமைப்புடன் நெருக்கமாக ஒத்திருந்தன. மேலும், அது சரியான காரணமின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிபதி சிங் தனது தீர்ப்பில், ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசை, இசையமைப்பாளரின் அசல் படைப்பாக இருக்கும்பட்சத்தில் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் என்று கூறினார்.