/indian-express-tamil/media/media_files/2025/07/02/actress-devayani-actor-nakkhul-childhood-photos-tamil-news-2025-07-02-20-31-50.jpg)
நடிகை தேவயானி, 90-களின் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர். தனது இயல்பான நடிப்பு, க்யூட்டான புன்னகை, மற்றும் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில ஹிந்தி, பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார். தேவயானி தன் திரைப்படப் பயணத்தின்போது இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து 2001-ஆம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் ரெட்நூல் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தனது மகள் பாடுவது குறித்து கூறியுள்ளார்.
பெங்காலி படமான 'ஷாத் பஞ்சோமி' மூலம் 1993-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவர், 1995-ல் 'தொட்டாச்சிணுங்கி' திரைப்படம் வழியாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், 1996-ல் அஜித் ஜோடியாக அவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கிராமப்புற ரசிகர்களின் அன்பைப் பெற்று, தமிழ் மக்களின் 'வீட்டுப் பெண்ணாக' அறியப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சூர்யவம்சம், மறுமலர்ச்சி, நீ வருவாய் என போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். கமல்ஹாசன், விஜய், அஜித், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரையிலும் அவர் நடித்த கோலங்கள் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்று, அவரது புகழை மேலும் உயர்த்தியது. சமீபத்தில், 'கைக்குட்டை ராணி' என்ற குறும்படத்தை இயக்கி, ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் பேட்டியில் ஒரு கலைஞருக்கு குடும்பத்தின் ஆதரவு மிகவும் அவசியம் என்று தேவயானி வலியுறுத்தினார். ஒரு கலைஞர் மிகவும் உணர்ச்சிபூர்வமானவர் என்றும், அவருக்கு குடும்பத்தின் ஆதரவு பெரிதும் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். கண்காட்சியில் பல கலைஞர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இது அவர்கள் பெற்ற ஆதரவைக் காட்டுவதாக அவர் கூறினார்.
தனது மகளான இனியாவின் பாடும் திறமை குறித்து கேட்கப்பட்டபோது, தன் கணவரும் தானும் தங்கள் குழந்தைகளை சிறு வயது முதலே பல்வேறு கலை மற்றும் கூடுதல் செயல்பாடுகளில் பங்கேற்க ஊக்குவித்ததாக தேவயானி விளக்கினார். பரதநாட்டியம், பாட்டு, ஓவியம், நீச்சல், சிலம்பம், கராத்தே போன்ற பலவற்றை தங்கள் மகள்கள் இனியா மற்றும் பிரியங்கா கற்றுக்கொண்டதாக அவர் பட்டியலிட்டார்.
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு தங்கள் குழந்தைகள் ஒருபோதும் மறுப்பு தெரிவித்ததில்லை என்று அவர் கூறினார். கற்றலுக்கு வயது வரம்பு இல்லை என்றும், தொடர்ந்து கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கும் அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். தனது இளைய மகள் பிரியங்கா ஒரு திறமையான கலைஞர் என்றும், அவர் காட்சி கலைகளைப் பயின்று, தத்ரூபமான ஓவியங்கள், குரோஷே மற்றும் நிட்டிங் ஆகியவற்றை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்ல பெற்றோருக்கான எடுத்துக்காட்டாக தான் இருப்பதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கூறியதற்குப் பதிலளித்த தேவயானி, பெற்றோர்களுக்கான தனது ஆலோசனையைப் பகிர்ந்து கொண்டார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒருவருடன் ஒருவர் ஒப்பிடக் கூடாது என்றும், அவர்களுக்கு தரமான நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு நொடியையும் ரசிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
படிப்பைத் தவிர்த்து, புத்தகங்கள், ஓவியம், இசை போன்ற செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இந்தச் செயல்பாடுகள் குழந்தையின் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன், அவர்களை வீடியோ கேம்கள் மற்றும் மொபைல் போன்களிலிருந்து விலக்கி வைக்கும் என்றும், இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்றும் அவர் நம்புவதாக தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.