/indian-express-tamil/media/media_files/2025/09/04/devadas-2025-09-04-12-06-56.jpg)
நமது காதல் கதைகளில் மிகவும் பிரபலமான மற்றும் சோக மான கதை 'தேவதாஸ்'. காதல் தோல்வி என்றாலே பலருக்கு முதலில் நினைவுக்கு வரும் பெயர் அவனுடையதுதான். அவன் தாடி, கையிலிருக்கும் மதுப் பாட்டில், மற்றும் அவனுடன் ஒரு நாய் - இதுதான் தேவதாஸ் என்றாலே நம் மனதில் தோன்றும் பிம்பம். ஆனால், இந்த பிம்பம் உண்மையில் நாவலில் சொல்லப்பட்டது அல்ல, பிறகுதான் திரைப்படங்களில் சேர்க்கப்பட்டது. இந்த சோகமான காதல் கதையின் பின்னணியைப் பற்றி இன்னும் ஆழமாகப் பார்க்கலாம்.
தேவதாஸ் என்பது நிஜமான மனிதன் அல்ல, அவர் வங்காள எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யாய் 1917-ல் எழுதிய 'தேவதாஸ்' என்ற நாவலின் ஒரு கதாபாத்திரம்தான். இந்தக் கதையில் தேவதாஸ் மற்றும் பார்வதி (பாரோ) இருவரும் குழந்தைப் பருவத்திலிருந்தே நண்பர்கள். அவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. தேவதாஸ் ஒரு பணக்கார ஜமீன்தாரின் மகன். ஆனால், பார்வதி அவனது குடும்பத்தைப் போல வசதியானவள் இல்லை. இருப்பினும், அவர்களின் காதல் உண்மையானதாக இருந்தது.
தேவதாஸ் மற்றும் பார்வதியின் காதல் விவகாரம் பற்றி அறிந்த பார்வதியின் தாய், தேவதாஸின் வீட்டிற்கு சென்று சம்பந்தம் பேசினார். ஆனால், தேவதாஸின் தந்தை சமூக அந்தஸ்து, கௌரவம் மற்றும் குடும்பப் பெருமை ஆகியவற்றை காரணம் காட்டி இந்தத் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால், மனம் உடைந்த பார்வதி தேவதாஸிடம் இதுபற்றி கேட்டபோது, அவனும் தன் தந்தையின் சொல்லை மீற முடியாமல் அவளை அனுப்பி வைத்தான்.
தேவதாஸின் மறுப்பால், பார்வதியின் பெற்றோர் அவளுக்கு ஏற்கெனவே திருமணம் ஆன ஒரு முதிய செல்வந்தருக்கு திருமணம் செய்து வைத்தனர். தனது காதலன் தன்னை விட்டுச் சென்றாலும், பார்வதி தன் புதிய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தனது கணவருக்கு விசுவாசமாக வாழ முடிவெடுத்தாள். ஆனால், அவளது திருமணத்தைக் கண்டு தேவதாஸ் மிகவும் மனம் வருந்தினான். தன்னுடைய தவறான முடிவே பார்வதியை பிரித்ததாக நினைத்து, பெரும் மன அழுத்தத்திற்கு ஆளானான். இந்த துயரத்திலிருந்து விடுபட முடியாமல், அவன் தனது நண்பன் மூலமாக மதுவிற்கு அடிமையானான்.
மது போதையில் தனது வாழ்க்கையை அழித்துக் கொண்ட தேவதாஸ், ஒரு நாள் பார்வதியைப் பார்க்க அவள் வீட்டிற்கு சென்றான். ஆனால், அவளைப் பார்க்காமலேயே அவள் வீட்டின் வாசலில் இறந்துபோனான். அவனது மரணம் குறித்து அறிந்த பார்வதி, சமூகக் கட்டுப்பாடுகளால் வெளியே வந்து அவன் இறந்த உடலைப் பார்த்து அழ முடியாமல் தவித்தாள். அந்தக் கதையும் அங்குதான் முடிவடைகிறது.
திரையில் தேவதாஸ்:
இந்தக் காதல் கதை பல திரைப்படங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. 1955-ல் இயக்குநர் பிமல் ராய் இயக்கிய இந்தித் திரைப்படத்தில்தான் (திலீப் குமார் நடித்தது) தாடியும், நாயும் தேவதாஸின் சோகத்தின் அடையாளங்களாக முதன்முதலில் சேர்க்கப்பட்டன. அதன்பின்னர், 2002-ல் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் நடித்த 'தேவதாஸ்' திரைப்படம் வெளியாகி, இளைஞர்களிடையே இந்தக் கதை மீண்டும் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தக் கதை, காதல் தோல்வியடைந்த ஒருவர் எப்படி இருக்கக் கூடாது என்பதை சமுதாயத்திற்கு உணர்த்துகிறது. நாவலின் தலைப்பு தேவதாஸ் என இருந்தாலும், பார்வதியின் பொறுமையும், தனது காதலை மனதில் வைத்துக்கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சலும் குறிப்பிடத்தக்கவை. எந்த ஒரு காதலியும் தன் காதலன் தன்னை நினைத்து தனது வாழ்க்கையை அழித்துக்கொள்ள விரும்புவதில்லை. தேவதாஸ் இறந்துபோனாலும், பார்வதி அவனை நினைத்து ஒவ்வொரு நாளும் மனதளவில் இறந்திருப்பாள். தேவதாஸ் என்ற கற்பனைக் கதாபாத்திரம் இன்றும் பல இளைஞர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறது. இது ஒரு கற்பனைப் பாத்திரம் ஒரு சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு சிறந்த சான்றாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.